– பழுளுல்லாஹ் பர்ஹான்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஸேட பணிப்பின் பேரில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்ட 32 தமிழ்-முஸ்லிம் பட்டதாரி பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில், மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ல்ஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதுடன், சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் சுசிமா விஜயசேகர, மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா. நெடுஞ்செழியன், மட்டக்களப்பு மாவட்ட உதவிச் செயலாளர் வாசுதேவ ,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் செயலாளர் முஹம்மட் றுஸ்வின் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள 32 பட்டதாரிப் பயிலுநர்களுக்கு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ஆகியோரினால் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர், முன்பள்ளி சிறுவர் உத்தியோகத்தர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், பெண்கள் விவகார உத்தியோகத்தர் என 4 படித்தரங்களாக நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






Leave a comment