தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விஸ்வரூபம் படத்துக்கு உயர் நீதிமன்ற பெஞ்ச் இன்று தடை விதித்தது. இந்தத் தடையை நீக்கி நேற்று தனி நீதிபதி விதித்த உத்தரவை ரத்து செய்துவிட்டது.
முன்னதாக இந்தப் படத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து கமல் தரப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் நேற்றிரவு 10 மணிக்கு படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று இரவு 11 மணிக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எலிபி தர்மராவின் வீட்டுக்குச் சென்ற அரசு வழக்கறிஞர்கள் படத்துக்கு தடை விதிக்கக் கோரி அப்பீல் மனு தாக்கல் செய்யப் போவதாகத் தெரிவித்தனர்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி நாளை காலை (இன்று) இந்த வழக்கை விசாரிப்பதாக அறிவித்தார்.இதையடுத்து இந்தப் படத்தின் மீதான தடை நீக்கத்தை எதிர்த்து இன்று காலை மேல் முறையீடு செய்தது தமிழக அரசு. இதை ஏற்று அரசு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் தலைமையிலான குழு காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக இதனை பதிவு செய்தது.
பின்னர் வழக்கு பகல் 2.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதிபதி எலிபி தர்மராவ், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், படத்துக்கு தடையை நீக்கி தனி நீதிபதி வெங்கட்ராமன் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தனர். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விஸ்வரூபம் படத்துக்கான தடையை நீடித்து உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் வரும் திங்கள்கிழமைக்குள் (பிப்ரவரி 4ம் தேதி) தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இறுதி விசாரணையை 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அன்றே தீர்ப்பும் வெளியாகும் என்று தெரிகிறது.
![130128062232_kamal_hasanvishwaroopammadras_high_court_304x171_pr[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/01/130128062232_kamal_hasanvishwaroopammadras_high_court_304x171_pr1.jpg?w=150&h=84)
Leave a comment