திரையிடப்பட்ட விஸ்வரூபத்தை நிறுத்தியது மலேசிய அரசு
கமல், விஸ்வரூபம்…முஸ்லிம்கள் என்றுதான் உலகம் முழுக்க இன்றைய பேச்சாக இருக்க, இந்திய மத்திய அரசின் உயரிய விருதான ‘பத்பூஷனு’க்கு பரிந்துரைக்கப்பட்ட கமல்ஹாஸனின் பெயர் கடைசி நேரத்தில் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகவும், விஸ்வரூபம் சர்ச்சைதான் இதற்குக் காரணம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசு நேற்று பத்ம விருதுகளை அறிவித்தது. விருது பெறுவோர் பட்டியலில் தமிழகத்திலிருந்து கமலுக்கு பத்மபூஷன் பரிந்துரைக்கப்பட்டிருந்ததாம்.
ஆனால் கமல் மீதான தற்போதைய பிரச்சினைகள் மத்திய அரசு அதிகாரிகளை கடைசி நேரத்தில் யோசிக்க வைத்துள்ளன.
விஸ்வரூபம் படத்துக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளன. இதையடுத்து தமிழகத்தில் இப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. வேறு சில மாநிலங்களிலும் தடை செய்யப்பட்டு உள்ளது.
இந்த சூழ்நிலையில் கமலுக்கு பத்மபூஷன் விருது வழங்குவது பொருத்தமாக இருக்காது என்று கருதி விருது பெறுவோர் பெயர்களை அறிவிப்பதற்கு முந்தைய நாள் பட்டியலில் இருந்து கமல் பெயரை கடைசி நேரத்தில் நீக்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரையிடப்பட்ட விஸ்வரூபத்தை நிறுத்தியது மலேசிய அரசு
மலேசியாவில் நேற்று திரையிடப்பட்ட கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தற்காலிக தடையை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் விதித்திருக்கிறது. விஸ்வரூபம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று மலேசியா வாழ் இந்தியர்கள் அமைப்பான ஹிண்ட்ராப் தலைவர் உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமிழகத்தில் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் வளைகுடா நாடுகளிலும் கடும் எதிர்ப்பை சந்தித்திருக்கிறது விஸ்வரூபம். இதேநிலைமைதான் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் விஸ்வரூபம் சந்திக்க நேரிட்டது. அதே நேரத்தில் இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான மலேசியாவில் இப்படம் நேற்று திரையிடப்பட்டிருந்தது.
மலேசியாவில் அந்நாட்டு தணிக்கை துறையால் தணிக்கை செய்யப்பட்டு படம் வெளியிடப்படுகிறதே என்பதை கமலை ஆதரிக்கும் திரை பிரபலங்கள் சுட்டிக்காட்டியும் பேசி வந்தனர். இந்நிலையில் அந்நாட்டு இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று விஸ்வரூபம் திரைப்படத்தை நிறுத்துமாறு திரையரங்குகளுக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து திரையரங்குகளில் விஸ்வரூபம் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டிருக்கிறது.
இதனிடையே கமலஹாசனின் விஸ்வரூபம் படத்துக்கான தடையை நீக்க வேண்டும் என்று மலேசியாவாழ் இந்தியர்கள் அமைப்பான ஹிண்ட்ராப் கோரிக்கை விடுத்துள்ளது. ஹிண்ட்ராப் தலைவரான உதயகுமார் இது குறித்து கூறுகையில், கமலஹாசனின் விஸ்வரூபம் படத்தைப் போல பல ஹாலிவுட் திரைப்படங்கள் மலேசியாவில் வெளியாகி இருக்கின்றன. இந்தப் படத்தில் யதார்த்தம் எதுவோ அதனை கமலஹாசன் வெளிப்படுத்தியிருக்கிறார். இதைத் தடை செய்வது ஏற்க முடியாது. விஸ்வரூபம் படத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
(TOI)
Leave a comment