பழுளுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் சுமார் ஒரு வாரங்களுக்கு பின்னர் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.இதனால் மக்களின் அன்றாட இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அவர்கள் பெரிதும் அவஸ்தைப்படுகின்றனர்.
நேற்றிரவிலிருந்து தொடர்ச்சியாக இடைவிடாது பெய்து வரும் அடைமழையால் தாழ்நிலப்பகுதிகளிலுள்ள வீடுகளில் வெள்ளம் உட்புகுந்து மக்கள் சீவிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
குறிப்பாக இரவு வேளைகளில் அதிகமாக மழை பெய்வதால் நித்திரையின்றி சிறு குழந்தைகளுடன் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிய போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் பெரிதும் அவஸ்தைப் படுகின்றனர்.
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் தாறுஸ்ஸலாம் வீதி ஏத்துக்கால் வீதி புதிய காத்தான்குடி தோனா வீதி ஆற்றங்கரையை அண்டிய பகுதிகளும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
இது தவிர கல்லாறு, கோட்டைக்கல்லாறு, தேத்தாத்தீவு, களுவாஞ்சிகுடி, களுதாவளை, வவுணதீவு, புலிபாய்ந்தகல், வாழைச்சேனை, ஏறாவூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வீடுகளில் வெள்ளநீர் உட்புகுந்துள்ளதுடன் பாதைகள் போக்குவரத்து செய்ய முடியாதவாறு வெள்ளநீரினால் நிரம்பியுள்ளது.










Leave a comment