சந்தையில் விற்கப்படும் உணவு மற்றும் சுவையூட்டப்பட்ட பானங்களுக்கு அளவுக்கதிகமாக சீனியையும், உப்பையும் பாவிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் புதிய ஒழுங்கு விதியொன்றை அறிமுகப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இலங்கைச் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற உணவு மற்றும் சுவையூட்டப்பட்ட பானங்களுக்குச் சேர்க்கப்பட்டிருக் கின்ற சீனி மற்றும் உப்பின் அளவு சர்வதேச அளவையும் தாண்டியுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டு பிரிவு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந் துள்ளது.
இதனடிப்படையிலேயே சுகாதார அமைச்சு இந்த ஒழுங்கு விதியை அறிமுகப்படுத்துவதற்கு முடிவு செய்து இருக்கின்றது.
இதேவேளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையில் கூடிய சுகாதார அமைச்சின் உணவு ஆலோசனைக் குழு உணவு மற்றும் பானங்களுக்கு சீனியையும், உப்பையும் பாவிப்பதற்கு இலங்கை தர நிலையம் சிபாரிசு செய்துள்ள சிபாரிசுகளை உடனடியாக அமுல்படுத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் ஒருவர் நாளொன்றுக்கு ஐந்து தேக்கரண்டிக்குக் குறைவாகவே சீனியைப் பாவிக்க வேண்டும். அதுவே மருத்துவ துறையினரின் சிபாரிசு ஆனால் தற்போது தினமும் ஒருவர் 9 தேக்கரண்டிகளுக்கும் மேல் சீனியை உட்கொள்கிறார். இது ஆரோக்கியத்திற்கு உகப்பானதல்ல என்று சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.
இதேபோல் இந்நாட்டில் தனிநபரொ ருவர் தினமும் ஒரு தேக்கரண்டி அளவே உப்பை உட்கொள்ள வேண்டும். அதுவே மருத்துவத் துறையினரின் சிபாரிசு ஆகும். ஆனால் தற்போது தினமும் நான்கு கரண்டிகள் அளவில் ஒவ்வொருவரும் உப்பை உட்கொள்கின்றனர். இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்காது எனவும் அவர் கூறினார்.
இதன்படி தற்போது சந்தையில் விற்கப்படுகின்ற கேக், பிஸ்கட், கொத்து ரொட்டி, பிரைட் ரைஸ், சீன உணவு வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு அதிகளவு சேர்க்கப்படுகின்றது. அது மனித உடலாரோக்கியத்திற்கு எந்த வகையில் உகப்பானதல்ல. இதே போல் குளிர்பானங்கள் உள்ளிட்ட பானங்களுக்கும் அளவுக்கு அதிகமாக சீனி சேர்க்கப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சீனி மற்றும் உப்பு போன்றவற்றை அளவுக்கு அதிகமாகப் பாவித்து வருவதன் விளைவாகவே நாட்டில் தொற்றா நோய்களுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் வகையிலேயே இந்த ஒழுங்கு விதி அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றது எனவும் அவ்வதிகாரி மேலும் கூறினார்.
-தினகரன்
Leave a comment