பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று தூக்கிலடப்பட்டு கொலை செய்யப்பட்ட ரிசானா நபீக் எனும் பணிப்பெண்ணின் மரணத்திற்கு மனித உரிமை அமைப்புக்கள், உலக செய்தி ஊடகங்கள் மற்றும் மனிதாபிமான அமைப்புக்கள் என்பன கடும் கன்டணங்களை வழங்கி வரும் இந்நேரத்தில் இலங்கையைச் சேர்ந்த ரிசானா நபீக்குக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றபட்டது குறித்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இலங்கை அரசின் வெளிநாட்டமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றில்,வயது குறைந்த பணிப்பெண்ணான, ரிசானா நபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படக்கூடாது என்று இலங்கை அரசு எடுத்த முயற்சிகளையும், இலங்கைக்குள்ளிருந்தும், சர்வதேச அளவிலும் வெளியிடப்பட்ட எதிர்ப்புகளையும் மீறி, அத்தண்டனை நிறைவேற்றப்பட்ட்து கடும் கண்டனத்துக்குரியது என்று கூறியிருக்கிறது.
இலங்கை அரசும் ஜனாதிபதி ராஜபக்ஷவும், ரிசானா நபீக்கின் குடும்பத்தினருக்கு, தங்களது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்திருக்கிறார்கள்.
ரிசானா நபீக்கை மரண தண்டனையிலிருந்து தப்பவைக்க இலங்கை அரசு எடுத்த முயற்சிகளை விவரித்த வெளிநாட்டமைச்சு, பல முறை அமைச்சர்கள் குழுக்களை சௌதி அரேபியாவுக்கு அனுப்பியது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தனிப்பட்ட முறையில் இரண்டு முறை இந்த தூக்கு தண்டனையை நிறுத்தவும், ரிசானா நபீக்குக்கு மன்னிப்பு வழங்கவும் கோரியது ஆகியவைகளை சுட்டிக்காட்டியது.
மேலும், ஆசிய மனித உரிமை அமைப்பின் உதவியுடன் இந்த மரண தண்டனைக்கு எதிராக மேல் முறையீட்டுக்கும் இலங்கை அரசு ஏற்பாடு செய்தது என்றும் ஆனாலும், சவுதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்துவிட்டது என்றும் இந்த அறிக்கை கூறியது.
இலங்கை நாடாளுமன்றம் ரிசானாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நிமிடம் மௌனம் காத்தது.
Leave a comment