– பழுளுல்லாஹ் பர்ஹான்
தேசிய எல்லை நிர்ணயம் தொடர்பிலான மாற்றுக் கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் முஸ்லிம் மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியிலுள்ள முஸ்லிம் மக்கள் உடனடியாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அல்லது கட்சியின் தலைமைக்குத் தெரியப்படுத்துமாறு அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண அமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தேசிய எல்லை நிர்ணயக் குழுவானது எல்லை நிர்ணயம் தொடர்பிலான தனது அறிக்கையினை மே மாதம் 31 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதால், முஸ்லிம் மக்கள் தமது பிதேசங்கள் பற்றிய எல்லை நிர்ணயம் தொடர்பில் மாற்றுக் கருத்துக்கள் இருக்குமாயின் அவை குறித்து உடனடியாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கோ அல்லது கட்சியின் தலைமைத்துவத்துக்கோ அறிவிக்குமாறு வேண்டுகின்றேன்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் எல்லை நிர்ணயம் குறித்து அதிகபட்ச அவதானத்தோடு நாம் இருந்து வருகின்றோம். ஆயினும், வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு வெளியிலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் எமது அவதானத்துக்கு அப்பால் தேசிய எல்லை நிர்ணயம் தொடர்பில் ஏதாவது தவறுகள் இடம்பெற்றுள்ளதாக நீங்கள் கருதுவீர்களாயின் அவை குறித்து உடனடியாக அறியத்தாருங்கள்.
இவ் விடயமானது அரசியல் சார்ந்ததல்ல என்பதால், முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள சிவில் மற்றும் சமூகசேவை அமைப்புக்களும் இவ் விவகாரத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது.
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலானது புதிய முறைமையின் பிரகாரம், 70 வீதம் வட்டார அடிப்படையிலும், 30 வீதம் வீதாசார அடிப்படையிலும் இடம்பெறவுள்ளது. எனவே, இதற்கென புதிதாக எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உதாரணமாக, குறித்த ஒரு பிரதேசத்தில் எல்லை நிர்ணயம் முறையாக இடம்பெறவில்லையாயின், அப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களின் உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதித்துவங்களில் பாதிப்புகள் அல்லது இழப்புகள் ஏற்படும் நிலை உருவாகும். எனவே, இவ்விடயத்தில் முஸ்லிம் மக்கள் மிகவும் கரிசனையுடன் செயற்படுமாறு வேண்டுகின்றேன்.
எல்லை நிர்ணயம் தொடர்பில் முஸ்லிம் காங்கிசுக்குத் தெரியப்படுத்தப்படும் முஸ்லிம் மக்களின் மாற்றுக் கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் சம்பந்தப்பட்டவர்களிடம் முஸ்லிம் காங்கிரஸ் கொண்டு செல்லும் என கட்சியின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண அமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
Leave a comment