உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் ஒலிம்பிக் சங்கத்தை சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் தற்காலிகமாக நீக்கி வைத்துள்ளது இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் பல வாதப் பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளது.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சர்ச்சைகுரிய தேர்தலே, சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் நடவடிக்கைக்கு காரணமாக அமைந்தது.
மேலும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சில நிர்வாகிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதையும், அவர்கள் நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொண்டு வருவதையும் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச சம்மேளனம் அது குறித்தும் கவலை வெளியிட்டுள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் முடிவு இந்தியாவில் சிலரிடையே ஆதரவையும், சிலரிடையே வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கருத்துக்கள்
இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்கிறார் 1992 ஆம் பார்சிலோனா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் குத்துச் சண்டைப் போட்டியில் பங்குபெற்ற வி தேவராஜன்.
ஆனால் இந்த முடிவு மிகவும் வருத்தமளிக்கக் கூடிய ஒன்று எனக் கூறுகிறார் 1996 ஆம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் தடகள வீரராக பங்குபெற்ற ஆர் நடராஜன்
இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைமைச் செயலராக லலித் பானோட் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தவறான சமிஞ்கைகளை வெளிப்படுத்தும், அவர் போட்டியிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்றும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார், விளையாட்டுத்துறை நிர்வாகியும் தமிழக காவல்துறையின் முன்னாள் தலைவருமான வால்டர் தேவாரம்.
எது எப்படியிருந்தாலும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வருடாந்திர பொதுச்சபைக் கூட்டம் இன்று(5.12.12) நடைபெற்றது. அதில் தம்மீது எந்தத் தவறும் இல்லை என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தத் தடையை நீக்குவதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும், பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்க பிரதமர் தலையிட வேண்டும் எனவும் அந்தப் பொதுச் சபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தமது நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மீதான தடை நீடிக்கவே செய்யும் என்று சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் புதன்கிழமையன்று அறிவித்தது.
News: BBC/Tamil

![19=940[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/12/1994012.jpg?w=530&h=310)
Leave a comment