‘டபிள் டெகர்’ ( Double Decker) இரட்டை தட்டு பஸ் என்றால் அனைவரது மனதிலும் உதிப்பது லண்டன் சிவப்பு நிற பஸ்களே!
பழைமையை மதித்து காலம் காலமாகப் பேணிவரும் ஆங்கிலேயர், பண்டைய காலத்து நினைவுச் சின்னங்களையும் பழைமையான வாகனங்களையும், புகை வண்டிகளையும் இன்றுவரை பயன்படுத்தி, உல்லாசப் பிரயாணிகளிடமிருந்தும் அந்நாட்டவர்களிடமிருந்தும் அதிகளவான வருமானங்களைப் பெற்றுவருவதானது அந்நாட்டிற்குரிய தனிச்சிறப்பாக அமைகின்றது.
இலங்கையில் ஆங்கிலயரின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பெறுமதிமிக்க புகைவண்டியின் எச்சங்கள் இன்றும் தெமட்டகொட புகையிரத நிலையத்தில் (Depot) மதிப்பில்லாமல் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன.
1945-50 களில் கொழும்பில் (PETTAH- BORELLA) சேவையிலீடுபடுத்தப்பட்ட ‘டபிள் டெகர்’ பஸ்கள்…
ஆங்கிலயரின் இறுதிக்காலத்தில் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களில் ஒன்றுதான் இந்த ‘டபிள் டெக்கர்’ எனும் இரட்டை தட்டு பஸ்களாகும். சுமார் 50 வருடங்கள் பழைமையான இத்தகைய பஸ்கள் இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் இன்றும் மேல்மாகாணத்தில் அவ்வப்போது போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. அதன் பின்னர் 1970களில் மீள் நிர்மாணிக்கப்பட்ட இத்தகைய பஸ்களும் இன்று புழக்கத்தில் இருந்து வருகின்றன.
கிழக்கில் மண்ணம்பிட்டி (பழைய பாலம்), ஓட்டமாவடி (பழைய பாலம்), கல்லடிப் பாலம் என்பவற்றின் வரையறுக்கப்பட்ட உயரத்தினால் இத்தகைய உயரமான போக்குவரத்து வாகனங்கள் வருவது தடுக்கப்பட்டிருந்தது. இதே போல் சுமார் 30 வருட யுத்தத்தில் வட கிழக்கில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலையினை கருத்திற்கொண்டு போக்குவரத்துக்களும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.
இன்று பாரிய அபிவிருத்தியினை நோக்கி முன்னேரும் இலங்கை, இவ்வாறான பாரம்பரியமான போக்குவரத்து வாகனங்களை இலங்கை முழுவதும் சேவையிலீடுபடுத்த உரியவர்கள் முயற்சித்தால் இதன் பலன் அனைவரையும் எட்டிச் செல்லும்.

![col21-35[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/11/col21-351.jpg?w=530&h=406)
Leave a comment