ஆசிரியர்கள் உரிய பாடசாலைக்கு செல்ல மறுத்தால் நியமனம் ரத்து: ஜனாதிபதி

பாடசாலைகளின் பெயர் குறித்து நியமனம் வழங்கப்படும் ஆசிரியர்கள் உரிய பாடசாலைகளுக்குச் செல்ல மறுத்தால் அவர்களின் நியமனங்கள் ரத்துச்செய்யப்படும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீண்டும் வலியுறுத்தினார்.

ஏற்கனவே பலமுறை இது குறித்துத் தாம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய் வதற்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக் கொண்டார். ஆசிரியர் நியமனத்தின்போது தற்போது பெயர்குறிப்பிட்டே நியமனங்கள் வழங்கப்படுகின்றன. எனினும், பல வழிகளில் செல்வாக்குகளைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் தமது பாடசாலைகளைத் தமக்கு வசதியாக ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இது விடயத்தில் கல்வி அமைச்சு கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இவ்வாறு செயற்படும் ஆசியர்களுக்கு எந்தவித பாரபட்சமுமின்றி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, குறித்த பாடசாலைகளில் நியமனங்களைப் பொறுப்பேற்காத ஆசிரியர்களின் நியமனங்களை ரத்துச் செய்ய நேரிடுமெனவும் குறிப்பிட்டார்.

நேற்று நடைபெற்ற இரத்தினபுரி மாவட்ட விசேட அபிவிருத்திக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஆசியர் பற்றாக்குறை தொடர்பான பிரச்சினைகளுக்குப் பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

–தினகரன்

 

 

 

Published by

Leave a comment