யாழ். தீபகற்பத்துக்கு 25 வருட காலத்துக்குப் பின்னர் தேசிய மின்சாரம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 25 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக இன்று தெரிவித்தார்.
தமது அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது:
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் இலங்கை வந்த இந்திய அமைதி காக்கும் படையினர் 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி ‘பவன்” என்ற நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
இதனைத் தடுக்கும் முகமாக புலிகள் மூன்று நாட்களுக்குள் யாழ் தீபகற்பம் முழுவதிலும் உள்ள தேசிய மின்சார விநியோக கட்டமைப்பை செயலிழக்கச் செய்தனர்.
அன்று முதல் இன்றுவரை யாழ்ப்பாணத்துக்கு தேசிய மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.
ஜப்பான் உதவியுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்ட துரித நடவடிக்கைகள் காரணமாக 3200 மில்லியன் ரூபா செலவில் தேசிய மின்சார விநியோக உப நிலையம் ஒன்று கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 25 ஆம் திகதி திறந்துவைப்பதன்மூலம் வட பகுதிக்கு தேசிய மின்சாரம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
– அரசாங்க தகவல் திணைக்களம்
Leave a comment