கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சராக முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளருமான நஜீப் ஏ. மஜீட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சற்று நேரத்துக்கு முன்னர் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டhர். இவரே இலங்கையின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது பற்றி புதிய முதலமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில்:
எனது தந்தை 17 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்து மக்கள் சேவையாற்றினார். நான் 13 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தேன். தற்போது முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளேன்.
என்னை இப்பதவியில் அமர்த்திய ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
முதல் முஸ்லீம் முதல்வர்
மாகாண சபை முறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட 25 வருட காலத்தில் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் என்ற பெருமையை இவர் பெறுகின்றார்
நடை பெற்று முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவைப் பெற்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி மீண்டும் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைக்கின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனிக்குமிடையில்இடம் பெற்ற பேச்சுவார்ததையிஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே நஜீப் ஏ மஜீத் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நடைபெற்று முடிந்த மாகாண சபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி வேட்பாளர் பட்டியலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தபட்ட இவர் 11,726 விருப்பு வாக்குககளைப் பெற்று மாகாண சபைக்கு உறுப்பினராக தெரிவானார்.
அரசியல் பிரவேசம்
நஜீப் ஏ மஜீத் அவர்கள் 1989 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு அரசியலில் நேரடியாகப் பிரவேசித்தார். எனினும் அந்தத் தேர்தலில் அவர் தோல்வியடைந்தார்.
ஆனால் 1994 ஆம் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு, கிண்ணியே பிரதேச சபையின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார்.
பின்னர் 1994, 2000 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து 2000 ஆம் ஆண்டு தபால் தந்தி, தொலைத் தொடர்பு ஆகிய துறைகளின் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். எனினும் 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார்.
மீண்டும் 2004 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார். 2007 ஆம் ஆண்டு கட்சியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக வெளியேறி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கூட்டுறவுத்துறை அமைச்சராகவும், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளின் துணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டு 2010 ஆம் ஆண்டு வரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.
2010 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
Leave a comment