சவுதி வீராங்கனை: தோல்வியிலும் ஓர் சாதனை!

-MJ
பல சமய அழுத்தங்களுக்கு மத்தியில் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் சவுதி வீராங்கனைகள் களமிறங்கியிருந்ததை யாவரும் அறிவோம். சவுதி அரேபியா சார்பாக இரு பெண்கள் இம்முறைக்கான ஒலிம்பிக்கில் முதன்முறையாக பங்குபற்றியிருந்தனர்.  ஓட்ட வீராங்கனையான ஸாரா அத்தாரும், ஜூடோ வீராங்கனையான வொட்ஜான் சாஹிர்கணி ஆகியோரே இரு பெண்களாவர்.

இவர்களுள் ஓட்டவீராங்கனையான சாரா அத்தார் நேற்று முன் இடம்பெற்ற ( புதன்கிழமை) மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் பங்குபற்றி போட்டியில் 8வது – இறுதி இடத்தைப் பெற்றார். 80,000 இரசிகர்கள் நிறைந்திருந்த அரங்கில், இஸ்லாமிய ஆடையுடன் இவர் இப்போட்டியில் பங்குபற்றி இருந்ததை பிரித்தாணிய ஊடகங்கள் கோடிட்டு காட்டிருந்தாலும், இப்போட்டியில் 800 மீற்றர்களும் ஓடி நிறைவு செய்திருந்ததையும் பெருமை பாராட்டி இருந்தன. இந்த இலக்கை இவர் 2 நிமிடங்கள், 44.9 செக்கன்களில் அடைந்திருந்தார். முதலாம் இடத்தை கெண்யாவின் ஜெனத் ஜெப்கோசஜி எனும் வீராங்கனை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் லண்டன் ஒலிம்பிக் அரங்கில் இறுதியாக ஓடினாலும், பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் சாரா அத்தாருக்கு எழுந்து உற்சாகமிளித்து ஆதரவுகளையும் வழங்கி இருந்தனர். இதன் மூலம் சவுதி அரேபியாவின் ஓர் பெண் ஒலிம்பிக் போட்டியில் 800 மீற்றர் ஓட்டத்தை நிறைவு செய்தார் எனும் சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கின்றார். இது அரபுலக சாதனையாகவும் இருக்கின்றது.

19 வயதான சாரா அத்தார் அமெரிக்காவில் பிறந்தவர். இவர் அமெரிக்கா-சவுதி அரேபியா இருநாடுகளினதும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர். இஸ்லாமிய உடையல்லாமல் போட்டிகளில் சவுதிப் பெண்கள் பங்குபற்றினால் தாங்கள் அவர்களை குறித்த ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து தடைவிதிப்பதாக ரியாத் தலைமையகம் எச்சரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Published by

Leave a comment