வடக்கு – கிழக்கு இணைப்பை முஸ்லிம் மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் மீண்டும் பெறுவதற்கு வழிவகுக்கும் வகையில் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தமிழ்பேசும் மக்கள் வழங்கப்போகும் தீர்ப்பு அமைய வேண்டும் என்றும் அதனையே சர்வதேச சமூகம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இன்று சனிக்கிழமை காலை மூதூர் பிரதேச செயலர் பிரிவில் உள்ள இறால்குழி என்ற தமிழ்க்கிராமத்தில் நடந்த தேர்தல் பிரசாரக்கூடத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்…
“கடந்த வாரம் கொழும்பில் பதவி விலகிச்செல்லும் அமெரிக்க தூதரை சந்தித்து பேசினேன். இந்தியத் தூதரையும் சந்தித்து பேசினேன். அவர்கள் எவ்வாறு கிழக்கு மாகாண சபையின் தேர்தல் முடிவு அமையக்கூடும் என்று விசாரித்தார்கள். அரசாங்கம் ஓர் உள்நோக்கத்துடன் தான் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை அதன் ஆயுள் இன்னும் ஒரு வருட காலம் இருக்கையில் சபையை கலைத்து விட்டு தேர்தலை நடத்துகின்றது. அரசாங்கத்தின் உள்நோக்கம் வெற்றி பெறாது. தமிழ் பேசும் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் அணிதிரண்டுள்ளார்கள் என்பதை தேர்தல் முடிவு வெளிப்படுத்தும். இது உறுதியானதாகும் என்று அத்தூதர்களுக்கு தான் பதிலளித்தேன்” என்றும் சம்பந்தன் மேலும் குறிப்பிட்டார்.
திருகோணமலை மாவட்ட தலைமை வேட்பாளர் சி.தண்டாயுதபாணி உட்பட பல வேட்பாளர்கள் மற்றும் திருகோணமலை மாவட்ட முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் ஆகியோரும் உரையாற்றினார்கள்.
-tamilmirror
Leave a comment