க. பொ. த. (உ/த) பரீட்சை திட்டமிட்டபடி 6ம் திகதி

-தினகரன்

* 2 இலட்சத்து 77,000 பேர் தோற்றுவர்

* கடந்த வருடம் தோற்றிய 355 பேருக்கும் இவ்வருடம் மீண்டும் அனுமதி

ஓகஸ்ட் ஆறாம் திகதி ஆரம்பமாகவுள்ள க. பொ. த. உயர்தரப் பரீட்சைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜகத் புஸ்பகுமார தினகரனுக்குத் தெரிவித்தார்.

இவ்வருடம் 2 இலட்சத்து 77 ஆயிரத்து 452 பேர் க. பொ. த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இவர்களுள் கடந்தவருடம் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 355 பேருக்கு இவ்வருடம் மீண்டும் பரீட்சைக்கு தோற்ற அனுமதியளிக்கப்பட் டிருப்பதாகவும் ஆணையாளர் நாயகம் கூறினார்.

2011 இல் க. பொ. த. உயர்தரப் பரீட் சைக்குத் தோற்றிய மாணவர்களது இசட் புள்ளிகள் மிக அண்மையில் வெளிவந்த நிலையில், அம்மாணவர்கள் இவ்வருடமும் பரீட்சைக்குத் தோற்ற விரும்பினால் அதற்கென விண்ணப்பிப்பதற்காக நாம் கால அவகாசம் வழங்கியிருந்தோம். அதற்கேற்ப எமக்கு 355 விண்ணப்ப படிவங்கள் கிடைத்திருந்தன. அம்மா ணவர்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளோ மெனவும் அவர் கூறினார்.

ஓகஸ்ட் 06 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சையில் 2 இலட்சத்து 20 ஆயிரத்து 535 பாடசாலை பரீட்சார்த்திகள் பங்குபற்றவுள்ளனர்.

தனிப்பட்ட பரீட்சார்த்திகளுள் 15 ஆயிரத்து 239 பேர் புதிய பாடவிதா னங்களுக்கு அமையவும் 41 ஆயிரத்து 323 பேர் பழைய பாட விதானத்துக்கமையவும் பரீட்சை எழுதவிருப்பதாகவும் ஆணையாளர் நாயகம் கூறினார்.

மேலும் வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் 2093 நிலையங்களில் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன. இதன்படி புதிய பாடத்திட்டத்துக்கமைய ஆயிரத்து 746 பரீட்சை நிலையங்களும் பழைய பாடத்திட்டத்துக்கமைய 347 பரீட்சை நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் 289 இணைப்பு நிலையங்களுக்கூடாக பரீட்சைகள் கண்காணிக்கப்படுவதுடன் சுமார் 12 ஆயிரத்து 500 வரையிலான ஆசிரியர்கள் கண்காணிப்பாளராக ஈடுபடுத்தப்படுவரெனவும் தெரிவித்தார்.

பரீட்சை ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கென பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிநிதிகள் நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படுவரென சுட்டிக்காட்டிய ஆணையாளர் நாயகம் புஸ்பகுமார புனர்வாழ்வுபெற்று வரும் முன்னாள் புலி உறுப்பினர்கள் மாகாண மட்ட பரீட்சை நிலையங்களுக்கு சமுக மளிப்பதன் மூலம் பரீட்சைக்கு தோற்ற முடியுமெனவும் குறிப்பிட்டார்.

Published by

Leave a comment