புனித ரமழான் காலத்தில் முஸ்லிம்களுக்கு தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுக்குமாறு அரசாங்கம் சகல அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய புனித ரமழான் மாத காலத்தில் முஸ்லிம்களுக்கு தடையின்றி தேவையான மின்சாரம், நீர் விநியோகம் உட்பட சகல விதமான அத்தியாவசிய வசதிகளை வழங்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ரமழான் மாதத்தில் முஸ்லிம்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பது தொடர்பாக ஆராயும் விஷேட கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்பின் பேரில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுக்காலை இடம்பெற்றது.
சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பெளசி, மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா, முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் வை. எல். எம். நவவி, ஜனாதிபதி செயலக உயர் அதிகாரிகள், அமைச்சுக்கள், அரசாங்க நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட கூட்டத்தின் போதே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தார்.
புனித ரமழான் மாத காலத்தில் தங்குதடையின்றி மின்சாரம் வழங்குதல், நீர் விநியோகித்தல், சதொச ஊடாக தேவையான அத்தியாவசிய பொருட்களைத் தட்டுப்பாடு இன்றி வழங்கவும், தேவையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அதேபோன்று நோன்பு காலத்தில் முஸ்லிம்கள் சமய வழிபாடுகளை தங்குதடையின்றி மேற்கொள்ளும் பொருட்டும், நேரகாலத்துடன் அலுவலகங்களிலிருந்து செல்வது தொடர்பான சுற்று நிருபம் வெளியிடுதல் மற்றும் அது தொடர்பான விடயங்களை அமுல்படுத்தல் தொடர்பாகவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
–தினகரன்
Leave a comment