இலங்கையின் முன்னோடி அபிவிருத்தி மாவட்டம் மட்டக்களப்பு: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

கடந்த ஐந்து வருடங்களில் மட்டக் களப்பு மாவட்டம் துரித அபிவிருத்தி கண்டுள்ளது. இலங்கையின் பிராந்திய அபிவிருத்தியின் முன்னோடி மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் அமைந் திருப்பதாக பிரதியமைச்சர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் தெரிவித்தனர்.

மாவட்ட அபிவிருத்தியில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்கு எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செயலமர்வில் அதிதிகளாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவர்கள் இவ்வாறு கூறினர்.

ஊடகத்துறை அமைச்சு ஏற்பாடு செய்திருந்த இந்தச் செயலமர்வில் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,  மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ், தேசிய அபிவிருத்தி ஊடக மத்திய நிலையப் பணிப்பாளர் ஆரிய ரூபசிங்ஹ, அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் மேலதிக செயலாளர் சந்திரபால லியனகே, தகவல் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் ஹில்மி மொஹமட் ஆகியோரும் 70 இற்கும் மேற்படி பிராந்திய ஊடகவியலா ளர்களும் கலந்து கொண்டனர்.

இந்த வருடத்துக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 வீத மின்சாரம் வழங்கப்படவிருப்பதுடன் உன்னிச்சை குடிநீர்த் திட்டம் கல்லாறு பால அபிவிருத்தி 100 கிலோ மீற்றர் வீதிகளை காப்பற் இடல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவிருப்ப தாக இங்கு உரையாற்றிய பிரதியமைச்சர் எல்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கூறினார்.

கடந்த ஐந்து வருடங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு 54,837 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. விவசாயம், கைத்தொழில், சுற்றுலாத்துறை மற்றும் வீதி அபிவிருத்தி ஆகியவற்றுக்கே இந்த நிதி செலவிடப்பட்டுள்ளது. இதில் வீதி அபிவிருத்திக்கு மாத்திரம் 32,045 மில்லியன் ரூபா செலவிடப்பட்டி ருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

யுத்தம் மற்றும் சுனாமியால் பாதிக்கப் பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியில் ஜனாதிபதி கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார். கடந்த காலங்களிலிருந்த ஜனாதிபதிகளை விட தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக் காலத்திலேயே மட்டக்களப்பு மாவட்டம் உண்மையான அபிவிருத்தி யைக் கண்டுள்ளது என்றார்.

அதேநேரம் வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்ற பல்வேறு அபிவிருத்திப் பணிகள் குறித்த தகவல்கள் பெரிதுபடுத்தப்படுவ தில்லை. இங்கு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பற்றிய உண்மை நிலைமையை அறிந்துகொள்ளா மல் புலம் பெயர்ந்து வாழ் தமிழர்கள் விமர்சனங்களை முன்வைப்பதாக பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். இந்த நிலையில் புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் இங்கு வந்து உண்மை நிலைமைகளைப் பார்வையிட வேண்டும் என்றார்.

-அரச ஊடகப் பிரிவு

Published by

Leave a comment