சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளிகள் பிணையில் செல்வதை தடுக்க சட்டம்: எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

நாட்டில் அதிகரித்திருக்கும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களைக் கட்டுப்படுத்தி அவற்றை முற்றாக ஒழிக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் அனைத்து கிராம சேவகர் பிரிவிலும் ஒவ்வொரு விசேட அதிகாரியை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

நாடு முழுவதிலுமுள்ள 16 ஆயிரம் கிராம சேவகர் பிரிவுகளிலும் ஒவ்வொரு அதிகாரி நியமிக்கப்படுவார். பட்டதாரி நியமனத்தின் ஊடாக அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர். இது தொடர்பாக பொது நிர்வாக அமைச்சுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருப்பதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தினகரனுக்குத் தெரிவித்தார்.

இந்த விசேட அதிகாரி கிராம மட்டங் களில் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றி ஆராய்வார். சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகள் குறித்த முறைப்பாடுகளை பெற்று பிர தேச செயலகங்களின் ஊடாக அவற்றைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பார். சிறுவர் துஷ்பிரயோகத்தை கிராம மட்டங்களிலிருந்து தடுப்பதற்கே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடும் சட்டங்களை அமுல்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கமைய சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவருவது தொடர்பில் நீதி அமைச்சுடன் ஏற்கெனவே பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்கள் பிணையில் வெளியே செல்ல முடியாத ளவுக்கு சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது நாட்டில் அதிகரித்திருக்கும் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றி விழிப் புணர்வை ஏற்படுத்தவும் நாம் விசேட திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம். பிள்ளைகள் குறித்து அக்கறை செலுத்த வேண்டிய முழுப் பொறுப்பும் பெற்றோருக்கு உள்ளது. எனவே, சிறுவர் துஷ்பிரயோகங்களை மற்றும் அவற்றிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பது குறித்து பாடசாலை மட்டங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த தாம் நடவடிக்கைகள் எடுத்திருப் பதாகவும் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் விவகாரப் பிரிவின் தகவல்களுக்கு அமைய 2012 ஆம் ஆண்டு மே மாத இறுதிவரை 557 சிறுவர் பாலியல் பலாத்கார சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இக்காலப் பகுதியில் 291 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களும், 318 கடத்தல் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

-thinakaran

Published by

Leave a comment