நேற்று, பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நடைபெற்று முடிந்த விம்பிள்டன் டென்னிஸ் சம்பியன்சிப் போட்டியில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இளம் புயல் ரோஜர் பெடரர் 7வது முறையாக விம்பிள்டன் சம்பியன்ஸ் பட்டத்தை வெற்றியீட்டி முடிசூடிக் கொன்டார். முப்பது வயதுடைய ரோஜர் பெடரர் 4-6 7-5 6-3 6-4 எனும் இலக்கில் வெற்றியை தனதாக்கிக் கொண்டார்.
இவ்வெற்றியின் மூலம் விம்பிள்டனில் 7 சம்பியன் பட்டங்களை வென்றுள்ள பீட்டர் சாம்ப்ராஸின் சாதனையை ரொஜர் பெடரர் சமப்படுத்தியுள்ளார். ஆரம்பத்தில் ஸ்கொட்லாந்து வீரர் அண்டி முரே முன்னிலையில் இருந்தபோதும், பின்னர் ஆடிய 3 செட்களில் தொடர் தோல்வியைத் தழுவி வந்தார். நேரத்திற்கு நேரம் சோர்வடைந்த ஓர் வீரர் போல் காணப்பட்ட முரே, பல தவறுகளை போட்டியின் போது செய்திருந்தார். புயல்வேகத்தில் பெடரர் இடத்தில் இருந்து வரும் பந்துகளை இலக்கு வைத்து திருப்பி அடிப்பதில் தோல்வி கண்டார். தடுமாற்றமும் தோற்றுவிடுவோமோ என்ற பதட்டமும் முரே இல் காணக்கூடியதாக இருந்தது. போட்டியின் போது தவறி விழுந்ததும் பின்னர் தடுமாறியதும் அவரின் வெற்றியின் திசையைத் திருப்பி இருந்தது.
பிரித்தாணிய பிரதமர் டேவிட் கெமரூன், அவரது மனைவி, கெய்ட் வில்லியம்ஸ், டேவிட் பெக்கம் மற்றும் அவரது மனைவி, இந்திய நட்சத்திரங்கள், உலக அரசியல், விளையாட்டு தலைவர்கள், மற்றும் பல்துறை விளையாட்டு வீரர்கள் என்று சூழ்ந்திருந்த அரங்கில் தனது தோல்விக்கு மன்னிப்புக் கோரியதுடன் தனக்கு ஆதரவளித்த அனைத்து இதயங்களுக்கும் நன்றியையும் தெரிவித்து விடைபெற்றார் அண்டி முரே!
இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள், தீவிர ஆதரவாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் பலர் அழுதனர். நேற்று மாலை பிரித்தாணியா நகரங்கள் சோகமாகக் காட்சியளித்தன.
75 வருடங்களாக பிரித்தாணியர்களின் டென்னிஸ் கனவு நனவாகவில்லை! 1938-ம் ஆண்டில் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் பணி ஓஸ்டின் (Bunny Austin) எனும் பிரித்தாணிய வீரர் விம்பிள்டன் பட்டத்தை வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
![Roger-Federer-Wimbledon-Champion-Wimbledon-Fi_2792727[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/roger-federer-wimbledon-champion-wimbledon-fi_27927271.jpg?w=300&h=225)
Leave a comment