-MMS
அன்மைக்காலமாக சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்களில் தமது கைவரிசையைக் காட்டிவந்த பௌத்த பிக்குகளுக்கு, பௌத்த மதத்தில் பிளவை ஏற்படுத்தும் ஓர் செயற்பாடும் போராட்டமும் தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கின்றது. காலியில் புதிதாக அமைக்கப்பட்ட பௌத்த மதப் பிரிவு ஒன்றின் மீது பௌத்த பிக்குகளும், சிங்களவர்களும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேற்றுமாலை காலியில் உள்ள வந்துரம்ப என்ற இடத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்கு புதிய பௌத்த மதப் பிரிவான சுமேத சங்கமயவின் சார்பில் ஏழு மாடிக் கட்டடம் ஒன்றில் பௌத்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மீது நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகளும், ஆயிரக்கணக்கான சிங்களவர்களும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
பௌத்த சித்தாந்தம் தவறானது என்று இந்த புதிய மதப் பிரிவினர் பரப்புரை செய்வதாக, தாக்குதல் நடத்தியோர் குற்றம்சாட்டியுள்ளனர். வந்துரம்ப நகரில் நேற்றுமாலை இடம்பெற்ற கூட்டம் ஒன்றையடுத்தே, இந்த புதிய மதப் பிரிவின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பௌத்த நிலையம் மீது தாக்குதல் நடத்தியோரை, பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைத்தனர்.
புத்த மதத்தை சிதைப்பதற்கு இந்த வழிபாட்டுத்தலம் அமைக்கப்பட்டிருப்பதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
Leave a comment