அரசாங்கத்துடன் தான் இணையப்போவதில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சிறையிலிருந்து கடந்த மாதம் விடுதலையான அவர் இன்று நடத்திய முதலாவது ஊடகவியலாளர் மாநாட்டின்போதே இதனைத் தெரிவித்தார்.
“உங்களில் பலர் கேட்க விரும்பும் கேள்வி இது. நான் ஒருபோதும் அரசாங்கத்துடன் இணையமாட்டேன். நான் ஆதரிக்கும் கொள்கைகளுக்காக எப்போதும் போராடுவேன். தற்போதைய ஊழல் ஆட்சியை அகற்றி நாட்டை பாதுகாப்பேன்” என சரத் பொன்சேகா கூறினார்.
இந்நாட்டு மக்கள் மத்தியில் தான் மீண்டும் அரசியல் ஸ்திரத்தை பெறுவதை தடுப்பதற்காக, தான் அரசாங்கத்துடன் இணையப்போவதாக சிலர் வதந்திகளை பரப்புவதாகவும் அவர் கூறினார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குதல், இந்நாட்டு மக்களுக்கு ஏற்றுக்கொள்ளத் தக்க அரசியல் தீர்வு காணுதல், நாட்டிலுள்ள ஊழல் அரசியல் கலாசாரத்திற்கு முடிவு கட்டுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய தனது அரசியல் விஞ்ஞாபனம் குறித்தும் அவர் கூறினார்.
-Tamilmirror
Leave a comment