‘அதற்காக நான் என்றும் அஞ்சியோ, மனம் குழப்பமடையவோ இல்லை. எனக்கும், எனது பாரியாருக்கும் பூரண பாதுகாப்பை பிரிட்டிஷ் அரசாங்கம் அளித்திருக்கிறது. அதற்காக நான் நன்றியைத் தெரிவிக்கிறேன்.’
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் விஜயத்தின் ஒரே ஒரு நிகழ்ச்சியின் போது மாத்திரம் எல்.ரீ.ரீ.ஈ.யை ஆதரிக்கும் இலங்கையில் இருந்து சென்ற புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். அதனால் அவர்களுக்கு பிரிட்டிஷ் முதலீட்டாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டவில்லை.
மற்றபடி ஜனாதிபதி அவர்கள் கலந்து கொண்ட 6 நிகழ்ச்சிகளும் இலங்கைக்கு நன்மையை ஏற்படுத்தக்கூடிய வகையில் வெற்றிகரமாக நடைபெற்றது என்று நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பிரிட்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் கறிஸ் நோனிஸ் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து, பிரிட் டிஷ் மகாராணியார் கலந்து கொண்ட ஒரு நிகழ்வுக்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கெமரூனுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பற்றி இரு தேசத் தலைவர்களும் விரிவான முறையில் கலந்துரையாடினார்கள். இலங்கை அரசாங்கம் வடபகுதியில் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை பாராட்டிய பிரிட்டிஷ் பிரதம மந்திரி, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைகளையும் படிப்படியாக நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, எங்கள் நாட்டு மக்களுக்கு நல்லதே செய்வேன். அதற்காக நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நிச்சயம் நடைமுறைப்படுத்துவேன் என்று உறுதியளித்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கெமரூன், இலங்கையின் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஜனாதிபதிக்கு எதிராக பிரிட்டனில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றமை குறித்து தாம் வேதனைப்படுவதாகவும் அதற்காக ஜனாதிபதி அவர்களிடம் கவலை தெரிவித்திருந்தார். அதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, என்னுடைய 42 வருட கால அரசியல் வாழ்க்கையில் இது போன்ற பல நிகழ்வுகளை சந்தித்திருக்கிறேன்.
அதற்காக நான் என்றும் அஞ்சியோ, மனம் குழப்பமடையவோ இல்லை. எனக்கும், எனது பாரியாருக்கும் பூரண பாதுகாப்பை பிரிட்டிஷ் அரசாங்கம் அளித்திருக்கிறது. அதற்காக நான் நன்றியைத் தெரிவிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
ஜனாதிபதி அவர்களுக்கு பிரிட்டனில் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கை ஜனாதிபதிக்கும் அவரது பாரியாருக்கும் குண்டுத்துளைக்காத வாகனத்தில் மகாராணியாரின் வைரவிழா நிகழ்வுகளில் பாதுகாப்பாக கலந்து கொள்வதற்கு வசதிகளை செய்து கொடுத்தது.
மற்ற நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் பஸ்களில் பயணித்து, இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்ட போதும் இலங்கை ஜனாதிபதிக்கு இந்த விசேட பாதுகாப்பை பிரிட்டிஷ் அரசாங்கம் வழங்கியதென்று எமது உயர் ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ் மேலும் தெரிவித்தார்.
-Thinakaran
Leave a comment