எலிசபெத் மஹாராணியின் வைரவிழாக் கொண்டாட்டம்: கொட்டும் மழையிலும் மக்கள் ஆர்வம்! (படங்கள்)

-MJ


அறுபது வருட (1952-2012)  எலிசபெத் மகாராணியின் முடியாட்சியை கௌரவிக்கும் முகமாக வைரவிழாக் கொண்டாட்டங்கள் பிரித்தாணியாவில் தற்பொழுது இடம்பெற்று வருகின்றது. வழமையை விட 4 நாட்கள் பொது விடுமுறை இந்நிகழ்வுகளுக்காக வழங்கப்பட்டிருக்கின்றது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை தேம்ஸ் நதிக்கரையில் ஆரம்பமான மகாராணியின் படகுச்சவாரியை பல்லாயிரக்கணக்கான மக்கள் கொட்டும் மழையிலும் நின்று கண்டுகளித்து தமது ஆதரவுக்கரங்ளை இராணிக்கு வழங்கி கௌரவித்தனர்.

இன்றும் நாளையும் மேலதிகக் கொண்டாட்டங்கள் நடைபெற இருக்கின்றன. அரச உயர்குடும்பங்களுக்கும் உலக அரச தலைவர்களுக்குமான விருந்தோம்பல் நிகழ்ச்சியும் பாரியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. உத்தியோக பூர்வமான இந்நிகழ்வுக்கு உலகத்தலைவர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் இந்நிகழ்வுக்கு வருகை தந்திருப்பதாக இங்கிலாந்து ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டிருந்தன.

தற்பொழுது பிரித்தாணியாவில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்றவாரம் சூடான காலநிலையாக இருந்தது. 24 செல்சியஸ் வெப்பநிலைக்குச் சென்றிருந்தது. ஆனால் தற்பொழுது தொடர்மழை பெய்துவருகிறது. வெப்பநிலை 10 செல்சியசுக்கும் குறைவாக இருக்கின்றது.

தற்பொழுது 86 வயதான எலிசபத் மஹாராணி, 1981, ஒக்டோபர் மாதம் 21-25 ஆம் திகதிகளில் அப்போதைய இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர். ஜயவர்த்தனாவால் அழைக்கப்பட்டு, அத்தினங்களில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இக்காலப்பகுதியில்தான் இலங்கை ரூபவாஹிணி தொலைக்காட்சி சேவை திறக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு இம் மஹாராணி வருகை தந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment