கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முழுப் பலத்தையும் வெளிக்காட்டுவோம்

மு. கா. தவிசாளர் பசீர் சேகுதாவூத்:

இன்றைய தினகரன் வாரமஞ்சரியில் வெளிவந்துள்ள கேள்வி-பதில் ஆக்கம்

கேள்வி: கிழக்கு மாகாண சபையைக் கலைத்து தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியென்ற வகையில் இந்த முடிவை வரவேற்கின்றீர்களா?

பதில்: கிழக்கு மாகாண சபையின் முழுமையான பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னர் அதனைக் கலைப்பதென்பதில் முஸ்லிம் காங்கிரஸ¤க்கு உடன்பாடில்லாத போதும் ஜனாதிபதியின் தீர்மானத்தை நாம் அனுசரித்துப்போக வேண்டும். நாட்டு நலன், தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் சர்வதேச அரசியல் நிலைமைகள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி இவ்வாறான தீர்மானத்தை மேற்கொள்ளும் போது அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதே காலத்தின் தேவையாக அமைகின்றது.

கேள்வி: கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக உங்கள் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமை நியமிக்க வேண்டுமென மு. கா. விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் தேர்தல் முடியும் வரை முதலமைச்சர் வேட்பாளர் எவரென அறிவிக்கப்பட மாட்டாதென அரசாங்கம் அறிவித்துள்ளதே? இது தொடர்பாக உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?

பதில்: தமிழ் நாளிதழ் ஒன்றில் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் அறிவிப்பை நானும் வாசித்தேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் முக்கியமான கட்சி. சிறுபான்மை மக்களின் அரசியல், பொருளாதார பிரச்சினைகளுக்காக முன்னின்று போராடும் கட்சி. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சி. 8 பாராளுமன்ற உறுப்பினர்களை நாம் கொண்டுள்ளோம். பாராளுமன்றத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நால்வர் அங்கம் வகிக்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சமனான பிரதிநிதித்துவத்தை நாம் கொண்டிருக்கின்றோம். கிழக்கு மாகாணத்தின் பிரதான கட்சியொன்ற வகையில் முதன்மை வேட்பாளராக நாம் போட்டியிடுவதிலோ அல்லது எம்மை அங்கீகரிப்பதிலோ எந்தத் தவறும் இருக்காது என நம்புகின்றேன்.

கேள்வி: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்த பின்னர் உங்கள் சமூகம் பெற்ற அனுகூலங்கள் என்ன?

பதில்: நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து ஆக ஒரு வருடங்கள் மட்டுமே. எமது மக்களுக்கு நாம் பாரிய பணியாற்றியுள்ளபோதும் அவைகளை இப்போது என்னால் நிரற்படுத்திக் கூறமுடியாது. முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு கண்டு வருகின்றோம். இன்னும் பல்வேறு விடயங்கள் உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டியதாய் இருக்கின்றது. அரசுடன் நாம் மிகவும் நல்லுறவுடனும் இணக்கத்துடனும் பணியாற்றி வருகின்றோம். மக்களின் சமூக, பொருளாதார விடயங்களை இனங்கண்டு அவர்களின் நல்வாழ்வுக்குத் தேவையான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம். ஐ. தே. க. ஆட்சியில் அந்தக் கட்சியுடன் நாம் கூட்டுக்கட்சியாகவிருந்து எமது மக்களுக்கு பணியாற்றியதைவிட இந்தக் குறுகிய காலத்தில் இந்த அரசுடன் இணைந்து பணியாற்றியமை அதிகமானது என்பதே என் கருத்து.

கேள்வி: உங்கள் கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகம் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அண்மையில் விடுத்த ஊடக அறிக்கையொன்றில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட அனுமதிக்கப்படக் கூடாதெனத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து தொடர்பாக கட்சியின் தவிசாளர் என்ற வகையில் நீங்கள் கூறவிழைவது என்ன?

பதில்: இந்த அறிக்கையை கட்சியின் உயர் பீடம் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை சில தனிப்பட்ட தேவைகளை அடைவதற்காக வெளிப்படுத்தப்பட்ட ஒரு விடயமாக நாம் இதனைக் கருத வேண்டியுள்ளது. ரவூப் ஹக்கீம் எமது கட்சியின் தலைவர். அவர் நாடு முழுவதற்கும் பொருத்தமானவர் என்றே நாம் கருதுகின்றோம். எனவே கட்சியின் எந்த உறுப்பினரும் தனிப்பட்ட ரீதியில் இப்படித்தான் செய்யவேண்டும் அப்படித்தான் செய்யவேண்டுமென வழிநடத்துவது ஓர் ஆரோக்கியமான செயற்பாடல்ல. அதுபொருத்தமானதும் அல்ல.

கேள்வி: கடந்த மாகாண சபைத் தேர்தலின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் உங்கள் வாக்கு வங்கியின் வீதம் அதிகரித்துள்ளதெனக் கருதுகின்aர்களா?

பதில்: கடந்த கால அனுபவத்திலிருந்து இரண்டு பிரதான கட்சிகளுடன் மாறி மாறி இணைந்து தேர்தலில் போட்டியிட்டிருக்கின்றோம். அதன் மூலம் அந்தக் கட்சிகளும் நன்மை பெற்றுள்ளன. அதேபோல நாமும் நன்மை யடைந்துள்ளோம். தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதில் நாம் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்துள்ளோம். அத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினை களை வெளிக்கொணர்வதில் நாம் பங்காற்றி இருக்கின்றோம். அம்பாறையில் பெரும்பான்மை சமூகம் எமக்கு வாக்களித்துள்ளது. மட்டக்களப் பில் தமிழ் மக்களில் குறிப்பிடத்தக்களவினர் எமக்கு வாக்களித்திருக்கின்றனர். எங்களது வாக்கு வங்கி கணிசமானளவு அதிகரித்துள்ளது. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அது நிரூபிக்கப்படுமென நம்புகின்றேன்.

கேள்வி: மாகாண சபைத் தேர்தலில் உங்கள் கட்சியின் சின்னத்தில் தனித்துப் போட்டியிட வேண்டுமென கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் கூறுகின்றனரே?

பதில்: எமது கட்சியின் தனித்துமான அடையாளத்தைப் பேணும் அதேவேளை அரசியல் ஸ்திரத்தன்மையைக் கருத்திற்கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதே எமது விருப்பமாகும்.

எனினும் முஸ்லிம் காங்கிரஸ¤க்கு அதைப்போல் வேறு தெரிவுகளும் உள்ளன. தனித்துப்போட்டியிடுவது மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் கூட்டில் இணைந்து போட்டியிடுவது மற்றைய தெரிவுகளாகும்.

கேள்வி : தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்ள தெரிவுக் குழு உதவுமென நீங்கள் நம்புகின்aர்களா?

பதில் : தமிழ் பேசும் மக்களின் நீண்ட காலப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதே மு. கா.வின் நிலைப்பாடு. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் தெரிவுக் குழுவில் இடம்பெறவுள்ளதால், தெரிவுக் குழுவே சிறந்த பொறிமுறை என்பதே என் கருத்து. இனப்பிரச்சினை தொடர்பாக கடந்தகால அரசுகள் மேற்கொண்ட முயற்சிகளையெல்லாம் எதிர்க் கட்சிகள் குழப்பியதே வரலாறு. அல்லது ஆளுங்கட்சியுடனான கூட்டணிக் கட்சிகளும் எதிர்த்த சரித்திரங்களையும் நாம் கண்டுள்ளோம். பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தங்களை இதற்கு நாம் சான்றாகக் குறிப்பிட முடியும்.

இந்திய தூதுக்குழு அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த போது, மு. கா. அந்தக் குழுவைச் சந்தித்தது. இந்தக் குழுவுக்கு தலைமை தாங்கிய இந்திய எதிர்க் கட்சித் தலைவி சுஸ்மா சுவராஜ், தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பங்கேற்கச் செய்ய முஸ்லிம் காங்கிரஸ் அனுசரணையாளராகச் செயற்பட வேண்டுமென எம்மிடம் கோரிக்கை விடுத்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து நாமும் அதிகாரப் பகிர்வை கோருவதால் எம்மிடம் அவ்வாறான வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தை இன்னும் வெற்றியளிக்கவில்லையே தவிர, அது தோல்வியில் முடிவடையவில்லை என்பதே என் கருத்து.

எனவே தெரிவுக் குழுவில் கூட்டமைப்பை பங்கேற்கச் செய்வதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட்டுள்ளோம். இரண்டு சமூகங்களின் தலைவர்களுக்கிடையிலான பாலமாக மு. கா. தொழிற்படுகின்றது.

கேள்வி : வடக்கு முஸ்லிம்களை மீளக் குடியேற்றுவதற்கு மு. கா. எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது?

பதில் : புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இது தொடர்பாக அரசாங்கத் தலைமையுடனும் அமைச்சர்களுடனும் தொடரான பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றோம். மீண்டும் சொந்த இடங்களுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ள அகதி முஸ்லிம்களை மீளக் குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு நாம் குறிப்பாக மீள் குடியேற்ற அமைச்சிடம் வலியுறுத்தி வருகின்றோம். இவர்கள் மீள் குடியேற உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. எனவே அது சம்பந்தமாக அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளோம்.

கேள்வி : ஜனநாயக ஐக்கிய முன்னணி (ளிஸிதி) அண்மையில் மு. கா.வுடன் இணைந்துள்ளது. முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளும் மு. கா.வுடன் இணைந்து ஒருமித்த குரலில் செயற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டா?

பதில் : எந்தக் கட்சியும் எம்முடன் இணைந்து செயற்படலாம். அதற்கான கதவுகள் திறந்திருக்கின்றன. எந்தக் கட்சியையும் நாம் வரவேற்கத் தயாராகவே இருக்கின்றோம்.

கேள்வி : கொழும்பில் இஸ்ரேலிய தூதரகம் அமைக்க எடுக்கும் முயற்சிகள் தொடர்பாக உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?

பதில் : இவ்வாறான முயற்சிகளை முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமே எதிர்க்கின்றது.

1985 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஜே. ஆர். ஜயவர்தன இவ்வாறான தீர்மானம் ஒன்றை எடுத்த போது, அப்போது அரசிலிருந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதை எதிர்த்தனர். தான் மேற்கொண்ட முடிவை எதிர்ப்பவர்கள் வெளியேறுங்கள் என ஜே. ஆர். அப்போது சொன்னார். இது வரலாறு. இஸ்ரேல் சியோனிசவாதிகளின் பிரதிநிதி என முழு முஸ்லிம் சமூகமும் கருதுகின்றது. அத்துடன் இஸ்ரேல் முஸ்லிம்களின் பொது எதிரி எனவும் கருதப்படுகின்றது. எனவே எமது ஜனாதிபதி இந்த விடயங்களை கவனத்தில் எடுப்பாரென நாம் நம்புகின்றோம். அவர் பலஸ்தீன மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர். பலஸ்தீன – இலங்கை நட்புறவுச் சங்கத்தின் தலைவராக நமது ஜனாதிபதி இருந்தவர்.

எனவே, முஸ்லிம்களின் உணர்வுகளை அரசு புரிந்துகொள்ளுமென நாம் நம்பு கின்றோம்.

Published by

Leave a comment