-SHM
இஸ்ரேல் பிரதிநிதிகள் இலங்கை வந்து சென்ற பின்னர் இலங்கையில் முஸ்லிம்கள் மீதான ஓர் அடக்குமுறை மேற்கொள்ளப்படுகின்றதா என சந்தேகிக்கும் அளவுக்கு அண்மைக்காலமாக முஸ்லிம்களின் சமய விவகாரங்களில் இலங்கையின் பெரும்பாண்மை இனத்தின் சில குழுக்கள் செயற்பட்டிருந்தமை அவதானிக்கத்தக்கது.
முஸ்லிம்கள் மீது பழி சுமத்தும் இவ்வாறான சில குழுக்கள் கிழக்கில் இன்னும் முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் செயற்படுவதாக சில ஊடகங்கள் இதற்கு முன்னர் சந்தேகம் தெரிவித்து ஆக்கங்கள் வெளியிட்டிருந்தமையும் மறக்க முடியாது.
இலங்கை முஸ்லிம்களின் பொருளாதார வளர்ச்சியையும் தனித்துவமான மார்க்கத்தையும் சகித்துக்கொள்ள முடியாத சில விசமிகள் இன்னும் இன்னும் அழுத்தங்களை எம் சமூகத்தின் மீது எத்தனித்துவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே மற்றுமொரு புறளியும் வெளிவந்திருக்கின்றது. அதுதான் இலங்கையில் அல்கய்தா இயக்கத்தினர் இருக்கின்றனரா? இவ் இயக்கத்துக்கு ஆதரவு இருக்கின்றதா? போன்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
அல் கயீடா மற்றும் தலிபான்களுடன் தொடர்புடைய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தடைகளை விதிப்பதற்கான சட்டங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அமுல்படுத்தப்படவுள்ளன என அரசாங்கம் நேற்று தெரிவித்தது.
உலக சூழ்நிலைக்கேற்ப நாம் செயற்பட வேண்டியிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன என அரசாங்கப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியிருக்கிறார்.
இலங்கையில் அல் கயீடா மற்றும் தலிபான் அமைப்புகளுடன் தொடர்புயை சக்திகள் உள்ளன என அரசாங்கம் நம்புகிறதா என டெய்லி மிரர் கேட்டபோது, அமைச்சர் ரம்புக்வெல்ல மழுப்பலாக பதிலளித்தார். ‘நோயை குணப்படுத்துவதைவிட தடுப்பது சிறந்தது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. உலகின் ஏனைய பாகங்களில் இடம்பெறுவதை நாம் அவதானித்து செயற்படுகிறோம்’ என அவர் கூறினார்.
இதேவேளை இச்சட்டங்கள் அமுல்படுத்தப்படுவது குறித்து சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி கருத்துத் தெரிவிக்கையில், இத்தகைய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான காரணம் எதுவும் இருப்பதாக தான் நம்பவில்லை எனக் கூறினார்.
‘அல் கயீடா அல்லது தலிபான் இலங்கையில் இல்லை. இது உண்மை. கிழக்கில் கூட இப்பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடையவர்கள் இல்லை என்பது தெளிவான விடயம்’ என அவர் கூறினார்.
ஐ.நாவுடனான இலங்கையின் கடப்பாட்டுக்கு இணங்க இப்புதிய ஒழுங்குவிதிகள் அமுல்படுத்தப்படவள்ளன. இதன்படி அல் கயீடா மற்றும் தலிபான்களுடன் தொடர்புவைத்திருத்தல், உதவியளித்தல், நிதியளித்தல் என்பனவற்றுக்கு அபராதம் மற்றும் சிறைவாசம் போன்ற தண்டனைககள் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் தூங்கிக்கொண்டிருக்கும் எமது முஸ்லிம் அமைச்சர்கள் இவ்விடயங்களை அரசாங்கத்துக்குத் தெரிவித்து உண்மையை உணர்த்தவேண்டும். இல்லையேல் ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது போல் பள்ளிவாயல்களினதும் மத்ரஸாக்களினதும் விபரங்கள் திரட்டப்பட்டு சந்தேக விசாரணைகளும், சில சுற்றிவளைப்புச் சோதனைகளும் நடக்கலாம்.
Leave a comment