நிபந்தனையற்ற முறையில் இலங்கைக்கு கட்டார் உதவி புரியும்!

இலங்கை துரிதமாக அபிவிருத்தி அடைவதைக் காண்பதே கட்டார் ராஜ்ஜியத்தின் இலக்கு என்று அந்நாட்டு அமீர் ஷெய்க் ஹமாத் பின் கலீபா அல் தானி மற்றும் அந்நாட்டு பிரதமர் ஹமாத் பின் ஜாசிம் பின் ஜாபர் அல்தானி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் துரித அபிவிருத்திக்காக ஒப்பந்தங்கள் மற்றும் நிபந்தனைகள் இன்றி தேவையான சகல ஒத்துழைப்புகளையும் வழங்குவதற்கு கட்டார் தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் நேற்று முன்தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இவர்கள் மேற்கண்டவாறு குறிப்பி ட்டுள்ளனர்.

கட்டார் நாட்டு அமீர் ஷெய்க் ஹமாத் பின் கலீபா அல் தானி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் நடத்திய பேச்சில் மேலும் கூறியதாவது :-

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கட்டார் விஜயமானது தமது நாட்டுக்குக் கிடைத்த பாரிய கெளரவமாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைக் கெளரவிக்கும் வகையில், தாம் இத்தினங்களில் மேற்கொள்ளவிருந்த மிக முக்கியமான வெளிநாட்டு பயணத்தை ரத்துச் செய்துவிட்டு நாட்டில் இருக்கின்றோம்.

இலங்கையின் அபிவிருத்திக்காக கட்டார் இராஜ்ஜியம் இது வரையில் பெற்றுக் கொடுத்துள்ள ஒத்துழைப்புகள் குறித்து தமக்கு திருப்தி அடைய முடியாதுள்ளது. அதனால் எதிர்காலத்தில் தேவையான எந்த ஒத்துழைப்பையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்காக இலங்கைக்கு வழங்குவேன்.

பயங்கரவாதப் பிரச்சினை காரணமாக இலங்கை பெரிதும் பின்னடைந்திருந்தது. இவ்வாறான நிலையில் பயங்கரவாதத்தைத் தோற்கடித்து நாட்டைப் பிராந்தியத்திலேயே உயர்ந்த இடத்திற்கு இட்டுச் செல்ல நடவடிக்கை எடுப்பதற்கு அவரது சிறந்த தலைமைத்துவமே காரணம் என்றார்.

இதேவேளை கட்டார் பிரதமர் ஹமட் பின் ஜாசிம் பின் ஜாபர் அல்தானி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை மிகவும் நட்பு ரீதியாக அமைந்திருந்தது. தாம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது தமக்கு அளிக்கப்பட்ட உயர் கெளரவத்தையிட்டு நான் இதயபூர்வமாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

இரு நாடுகளுக்குமிடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த வலுவான நட்புறவு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். இலங்கையின் மேம்பாட்டை எமது நாடு ஆர்வத்தோடு எதிர்பார்த்திருக்கின்றது.

இதற்கு தேவையான சகல ஒத்துழைப்புகளும் பெற்றுக்கொடுக்கப்படும் என்றார். இச் சமயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழு மாநாட்டின்போது கட்டார் இலங்கைக்குப் பெற்றுக்கொடுத்த முழுமையான ஆதரவுக்கு எனதும், எனது நாட்டில் வாழுகின்ற சகல மக்களினதும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

இப்பேச்சுவார்த்தைகளில் சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி, அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், ரிஷார்ட் பதியுத்தீன், பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

Published by

Leave a comment