அணி வகுப்பில் இராணுவம், கடற்படை, விமானப் படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 13,680 வீரர்கள் பங்கேற்பு!
-MMS
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியின் மூன்றாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெற்றி விழா அணிவகுப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் கொழும்பு காலி முகத்திடலில் சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு கோலாகலமாக இடம்பெறவுள்ளது.
இதனை முன்னிட்டு கடந்த 14ம் திகதி ஆரம்பமான ஒத்திகை இன்றுடன் நிறைவு பெறுகிறது.
நேற்று நடைபெற்ற நான்காவது நாள் ஒத்திகையை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் பார்வையிட்டனர்.
பிரதான மேடை அமைக்கப்பட்டுள்ள பிரதேசத்திற்கு வருகை தந்த பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, முப்படைத் தளபதிகள் முழுமையான அணி வகுப்புக்கான ஒத்திகைகளை பார்வையிட்டதுடன், தேவையான ஆலோசனைகளையும் வழங்கினர்.
இம்முறை நடைபெறவுள்ள வெற்றி அணி வகுப்பில் இராணுவம், கடற்படை, விமானப் படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 13,680 வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இவர்களில் 852 அதிகாரிகளும், 12,828 முப்படை வீரர்களும் அடங்குவர்.
பாதுகாப்பு சேவைகள் மற்றும் கட்டளை கல்லூரியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் ரம்புக்பொத்த தலைமையில் நடைபெறவுள்ள இந்த அணி வகுப்பில் வடக்கு, கிழக்கு மற்றும் வன்னி படையணியினர் பங்குகொள்ளவுள்ளனர்.
மனிதாபிமான நடவடிக்கையின் போது கள முனையில் பயன்படுத்தப்பட்ட சகல கனரக ஆயுதங்கள், ஆயுத தாங்கி வாகனங்கள், கவச வாகனங்கள், சமிக்ஞை கருவிகள் போன்ற இராணுவத்தின் 148 வாகனங்களும், கடற்படைக்குச் சொந்தமான 72 யுத்தக் கப்பல்கள், தாக்குதல் கப்பல்கள் மற்றும் அதிவேக படகுகளும், விமானப்படைக்குச் சொந்தமான விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் காலி முகத்திடல் கடல் மற்றும் வான் பரப்பில் சாகசங்களை காண்பிக்கவுள்ளன.
நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து தாய் நாட்டை மீட்டெடுக்கும் நடவடிக்கையின் போது உயிர் நீத்த படை வீரர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 முப்படை வீரர்களுக்கு இந்த அணிவகுப்பின் போது பரம வீரவிபூஷண விருது வழங்கப்படவுள்ளன.
உயிர் நீத்தவர்களின் உறவினர்களிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்த உயர் விருதுக்கான பதக்கங்களை வழங்கவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தினகரனுக்குத் தெரிவித்தார்.
இம்முறை மிக கோலாகலமாக நடைபெறவுள்ள வெற்றி அணிவகுப்பை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லே தெரிவித்தார்.
இதனை பார்வையிட வருபவர்கள் கொழும்பு கோட்டை பகுதியின் ஊடாக ஜனாதிபதி செயலகப் பகுதிக்கு வருகை தந்து நேரடியாக கண்டுகளிக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம, பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்கக்கோன் உட்பட முப்படை, பொலிஸ், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் நேற்றைய ஒத்திகையை பார்வையிட்டனர்.

Leave a comment