இன்று உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்
இன்று சர்வதேச செஞ்சிலுவை தினமாகும். இதனை முன்னிட்டு “மனித நேயத்துக்காக ஒன்றிணைவோம்” என்னும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் மட்டக்களப்பு கிளையும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவும், இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் ஒன்றை இன்று நடத்தினர்.
மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் த.வசந்தராசா தலைமையில் இரத்ததான முகாமின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் முருகானந்தன், எகட் கரித்தாஸ் அமைப்பின் பணிப்பாளர் அருட்பணி கிறவுன்ஸ் அடிகளார் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து இரத்ததான முகாம் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் பெருமளவானோர் கலந்துகொண்டதுடன் பொலிஸ், படையினர், விமானப்படையினரும் இணைந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இரத்தம் வழங்கியதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவு தெரிவித்தது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் மாதாந்தத் தேவை 600 அலகுகள், மாதாந்த நன்கொடையாக 200 அலகுகள் கிடைக்கின்றன. ஆனால் பற்றாக்குறையாக 400 அலகு இரத்தம் தேவையாகவுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு இப்பாரிய மனிதாபிமானப் பணியினை முன்னெடுத்ததாக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் த.வசந்தராசா தெரிவித்தார்.
உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் (International Red Cross and Red Crescent Day) மே 8ஆம் நாளன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
முதலாவது நோபல் விருதைப் பெற்றவரும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆரம்பகார்த்தாவுமான ஹென்றி டியூனண்ட் (Henry Dunant) அவர்களின் பிறந்த நாளான (மே 8, 1828) இந்நாள் 1948 ஆம் ஆண்டிலிருந்து சிறப்பு நாளாக அங்கீகரிக்கப்பட்டது.
முதலாம் உலகப் போரின் பின்னர் சமாதானத்துக்கான தேவை உணரப்பட்டது. செக்கோஸ்லவாக்கியாவில் சமாதானத்தை வலியுறுத்தி 1922 இல் ஈஸ்டர் திருநாளுக்காக மூன்று நாள் யுத்த நிறுத்தத்துக்கான வேண்டுகோள் விடப்பட்டது.
இதுவே பின்னர் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாளாக அநுசரிக்கத் தூண்டுதலாக அமைந்தது எனலாம். 1934 ஆம் ஆண்டு டோக்கியோவில் இடம்பெற்ற செஞ்சிலுவைச் சங்கத்தினரின் 15வது அனைத்துலக மாநாட்டில் இது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இருப்பினும் 1948 ஆம் ஆண்டிலேயே இந்நாளை செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தவரான ஹென்றி டியூனண்ட் அவர்களின் நினைவாக ஆண்டுதோறும் கொண்டாடும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
முதலில் இந்நாள் செஞ்சிலுவைச் சங்க நாள் என்றே அழைக்கப்பட்டது. எனினும் பின்னர் பல மாற்றங்களுக்குள்ளாகி 1984 இல் இருந்து இந்நாள் உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் என அழைக்கப்படுகிறது.
-adaderana

Leave a comment