ஓய்வூதியத்திற்கு விருப்பம் தெரிவிக்கும் கால எல்லை டிசம்பர் 31 வரை நீடிப்பு

விதவைகள், தபுதாரர்கள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியத்திற்கு விருப்புரிமை தெரிவிக்கும் கால எல்லை டிசம்பர் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தலின்படி பெப்ரவரி 29ம் திகதியே விருப்புரிமை தெரிவிப்பதற்கான இறுதித் திகதியாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் வசதி கருதி இதற்கான கால எல்லை டிசம்பர் வரை நீடிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட செயலகங்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

ஓய்வூதிய திணைக்களத்தின் புதிய சுற்று நிருபத்திற்கமைவாக விதவைகள், தபுதாரர்கள் மற்றும் அநாதைகள் டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னதாக தமது விருப்புரிமையை ஓய்வூதியப் பணிப்பாளர், ஓய்வூதியத் திணைக்களம் மாளிகாவத்தை செயலகம், மாளிகாவத்தை, கொழும்பு-10 என்ற முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.

கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் 13/2010 ம், 2/2012 சுற்றறிக்கைக்கான விண்ணப்பம் எனக் குறிப்பிடுதல் கட்டாய மெனவும் ஓய்வூதியத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

புதிய சுற்றறிக்கையின் பிரகாரம், ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர்கள் மற்றும் வழங்கப்படும் ஓய்வூதிய முறைகளில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் என்பனக் குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளன அதன்படி,

1. பயங்கரவாத காரணங்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் உயிரி ழக்கின்ற, உரித்துடைய அரச அலுவலர்களுக்காக, இறுதியாக வழங்கப்பட்ட சம்பளத்தினை அடிப்படையாகக் கொண்டு விதவைகள் / தபுதாரர்கள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியத்தினைப் பெற முடியும்.

2. தற்காலிக பதவியிலுள்ளவர்கள் பயங்கரவாத காரணங்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்களின் மூலம் உயிரிழக்கையில், விதவைகள் / தபுதாரர்கள் மற்றும் அநாதைப் பிள்ளைகளுக்கு ஓய்வூதிய உரித்தினைப் பெற்றுக் கொடுத்தல்

3. 26 வயதிற்கு குறைந்த அநாதைப் பிள்ளைகளுக்கு விவாகத்தினைக் கருத்திற் கொள்ளாது அநாதைகள் ஓய்வூதியத்தினை வழங்குதல்.

4. திணைக்களங்கள் மூடப்பட்டு அல்லது பதவிகள் இல்லாமல் போவதன் காரணமாக ஓய்வு பெறச் செய்யப்பட்ட அலுவலர்கள் 55 வயதிற்குள்ளாக எந்த வயதில் திருமணம் செய்து கொண்டாலும் விதவைகள்/தபுதாரர்கள் மற்றும் அநாதைகளுக்கு ஓய்வூதியத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த அலுவலர் தனது 55 வயது வரையான காலத்திற்குரிய விதவைகள், அநாதைகள் ஓய்வூதிய உதவித் தொகையை வட்டியுடன் செலுத்துவதன் மூலம் விதவைகள், அநாதைகள் ஓய்வூதியத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

5. நிரந்தர ஓய்வூதிய உரித்துடைய ஒருவர் 10 வருடங்களுக்கு மேற்பட்ட சேவைக்காலத்தினைப் பூரணப்படுத்தி இருப்பினும் ஓய்வூதிய உரிமையினை இழக்கும் சந்தர்ப்பத்தில் அவ் அலுவலரின் இறப்பின் பின்னர் விதவைகள் / தபுதாரர்கள் மற்றும் அநாதைகள் ஆகியவர்களுக்கு ஓய்வூதிய உரித்தினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

6. மீள் விவாகம் செய்து கொள்ளும் விதவைகள் மற்றும் தபுதாரர்கள், அவர்களுக்கு இடைக்கப்பெற வேண்டிய ஓய்வூதியத்தின் 50 சதவீதத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும்,

அதாவது முன்னைய சுற்றறிக்கையின்படி ஓய்வூதியம் பெற்று வரும் விதவைகள் அல்லது தபுதாரர்கள் மறுமணம் செய்தால் அவர்களுக்கு ஓய்வூதியத்தினை தொடர்ந்தும் பெற முடியும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

-Thinakaran

Published by

Leave a comment