உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்த வீதி மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது

மட்டக்களப்பு விமானப்படையின் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்த ஆலையடிச்சோலை பொதுமயானத்துக்கு அருகில் செல்லும் வீதி விமானப் படையினரால் திறக்கப்பட்டு மக்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் புத்தூர் விமானப்படைத்தள விரிவாக்கத்தின் போது ஆலையடிச்சோலை பொதுமயானம் உட்பட சில குடியிருப்புக்களும் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்வாங்கப்பட்டன. 

குறித்த பொதுமயானம் விமானப்படையினரால் பொது மக்கள் பாவனைக்காக அண்மையில் கையளித்திருந்த போதிலும் மக்கள் பூதவுடல்களை நல்லடக்கத்திற்காக அங்கு கொண்டு செல்வதற்கான மாற்றுப் பாதை ஒன்றே வழங்கப்பட்டுவந்தது.
இந்தப்பாதையூடாக போக்குவரத்துச் செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவந்த நிலையில் இது தொடர்பில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரனின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு-திருமலை அதிவணக்கத்திற்குரிய ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, மாநகர முதல்வர் மற்றும் பிரதி முதல்வர், உறுப்பினர் ஆகியோர் ஸ்தலத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
இது குறித்து விமானப்படையின் கட்டளையிடும் அதிகாரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பொதுமயானத்துக்கு செல்லக் கூடியதாக இருந்த இலகுவான வழிப்பாதையையும் உள்ளடக்கி பொது மக்களின் குடியிருப்புக்களுடன் இடப்பட்டிருந்த பாதுகாப்பு வேலியை முன் நகர்த்தி அப்பாதையை பொது மக்கள் பொதுமயானத்துக்கு செல்வதற்காக பயன்படுத்த வழங்குவதற்கு விமானப்படையினர் முன்வந்துள்ளனர்.

-adaderana

Published by

Leave a comment