பண்டைய காலந் தொட்டு முஸ்லிம்கள் தாய்நாட்டு விசுவாசிகளாக வாழ்ந்ததே வரலாறு

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள் இனி இல்லை

-நுவரெலியாவில் ஜனாதிபதி:

நாடுகள் இனங்களைப் பிரித்து நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையில் பேதங்களை ஏற்படுத்த உலக நாடுகள் பல முயற்சிக்கின்றபோதும், சகல இன மக்களும் ஐக்கியமாக வாழும் இலங்கையை எம்மால் கட்டியெழுப்ப முடிந்துள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். காத்தான்குடியில் இடம்பெற்ற துயரமான சம்பவம் போன்று இனியும் இந்த நாட்டில் இடம்பெறாது என குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கையில் முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுடன் இணைந்து ஒற்றுமையாக வாழவே விரும்புகின்றனர் எனவும் தெரிவித்தார்.

முஸ்லிம் மக்கள் என்றும் எமது சகோதரர்களே, எம் மத்தியிலுள்ள உறவை எத்தகைய சக்தியாலும் பிரிக்க முடியாது. வரலாற்று மன்னர்கள் கூட தமது செயற்பாடுகள் மூலம் அதனை நிரூபித்துள்ளனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பேருவளை முன்னாள் நகர சபைத் தலைவர் மர்ஹும் ஹசன் மெளலானா, மர்ஜான் பZல் ஆகியோரினால் மீள் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ள நுவரெலியா அல் கபீர் ஜும்ஆ பள்ளிவாசலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

அமைச்சர் சி.பி. ரத்நாயக்க, நவீன் திசாநாயக்க, பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ. எச். எம். அஸ்வர், எஸ். ஸ்ரீரங்கா, பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவரும் நுவரெலியா நகர சபை உறுப்பினருமான பZல் ஆகியோர் உட்பட முஸ்லிம் மதத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

முஸ்லிம் மக்களுக்காக நுவரெலியா நகரில் இத்தகைய பள்ளிவாசலொன்றை நிர்மாணித்து அதனைத் திறந்து வைப்பதற்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பாக்கியமாகக் கருதுகிறேன். இந்த பள்ளிவாசலைத் திறந்து வைப்பதற்கு எனக்கு அழைப்பு விடுத்தமைக்கு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நான் நன்றி கூறுகின்றேன்.

பேருவளை, முன்னாள் நகர பிதாவான மர்ஹும் எம். எஸ். எம். பZல் இந்த பள்ளிவாசல் புனர்நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அவரது மகன் மர்ஜான் பZல் நிர்மாணப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டார். இந்நாட்டு மக்கள் சார்பில் நான் இத்தகைய செயற்பாடுகளை மேற்கொண்டோருக்கு நன்றி கூறவிரும்புகிறேன்.

இந்த பள்ளிவாசலைக் கட்டியெழுப்புவதன் மூலம் முஸ்லிம்கள் திருப்தியடைய முடியாது. உண்மையான இஸ்லாம் என்றால் நபிகள் நாயகத்தின் போதனைகளை ஏற்று அதன் படி வாழ வேண்டியதன் அவசியத்தை இங்கு மத போதனை செய்த தலைவர்கள் குறிப்பிட்டனர். முஸ்லிம்கள் என்ற ரீதியில் உலகிற்கு சேவை செய்தல், சகல இன மக்களுடனும் சமாதானம் ஐக்கியத்துடன் வாழ்தல் போன்ற விடயங்கள் அவரது போதனைகளில் அடங்குகின்றன. இதனை அடித்தளமாகக் கொண்டு சகல இன மக்களும் ஒன்றிணைந்து வாழ வேண்டிய அவசியம் எமக்குள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரை மிக நீண்டகாலங்களாக சிங்கள தமிழ் மக்களுடன் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து வாழ்ந்து வந்துள்ளனர். மலை நாட்டை ஆட்சி செய்த மன்னர்களும் முஸ்லிம் மக்களுக்கு விசேட வரப்பிரசாதங்களை வழங்கியுள்ளனர். அவர்களை மலை நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் குடியமர்த்தியுள்ளனர். இதனை நாம் வரலாற்றில் பார்க்க முடிகிறது.

அதேபோன்று வெளிநாட்டு ஏகாதி பத்தியவாதிகளின் ஆக்கிரமிப்புகளின்போது முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களின் பக்கம் நின்று ஆதரவு நல்கியுள்ளனர். இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தபோதும் இந்த நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுக் கொடுப்பதிலும் பங்களிப்பு செய்தனர். அதேபோன்று பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்க மேற்கொண்ட நடவடிக் கைகளிலும் முஸ்லிம் சமூகத்தின் ஆதரவு எமக்கு மிகுந்த பலமாக அமைந்தது.

வரலாற்றுக் காலத்திலிருந்து முஸ்லிம் மக்கள் இவ்வாறு செயற்பட்டு வந்துள்ளமை இந்த நாட்டின் மீது அவர்கள் முழுமையான அன்பைச் செலுத்தியதால் தான் உலகில் சிலர் இத்தகைய மக்களை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. ஒன்றாக வாழ அவர்களுக்கு விருப்பமில்லை.

சில நாடுகள் இனங்களைப் பிரித்து நாடுகளைப் பிரித்து பகைமையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. இதனை நன்கு இனங்கண்டு, உணர்ந்து நாம் ஒற்றுமை யாகவும் ஐக்கியமாகவும் சமாதானமாகவும் எம்மால் வாழ முடிகின்றது.

இஸ்லாம் மதத்தின் அடிப்படை போதனைகள் சகல இன மத மக்களோடும் சமாதானமாகவும் ஐக்கியமாகவும் வாழவேண்டியதை வலியுறுத்துகின்றன. அதேபோன்று நபிகள் நாயகம் சகல மக்களும் ஒரே குடும்பத்தினரைப் போல வாழவேண்டுமென போதித்துள்ளார்.

எனது சமயமான பெளத்த சமயத்தில் புத்த பகவான் ‘மிருகங்களுக்கிடையில் பேதங்கள் வேறுபாடுகள் நிலவினாலும் மனிதர்களுக்கிடையில் பேதங்கள் இருக்கக் கூடாது என்பதைப் போதித்துள்ளார். இதன் மூலம் எங்கே பிறந்தாலும் மனிதர்கள் மனிதர்கள் தான் என்பதையே அவர் வலியுறுத்தியுள்ளார். இதன் காரணத்தாலேயே எமது நாட்டிலும் சகல இன, மத மக்களும் ஐக்கியமாக ஒன்றிணைந்து வாழ வழிசமைக்கப்பட்டுள்ளது.

இந்த பள்ளிவாசலைக் கட்டியெழுப்புவது போன்று எமது உள்ளங்களில் நபிகள் நாயகத்தின் போதனைகள் அவரது தர்மத்தை நாம் உண்மையாக ஏற்று குணசீலர்களாக வாழவேண்டும். சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப நாம் உழைக்க வேண்டும்.

வர்த்தக நடவடிக்கைகளின் போதும் அளவை நிறுவைகள் நியாயமானதாக இருக்க வேண்டுமெனவும் நீதி நேர்மையை புனித குர்ஆன் போதிக்கின்து.

இறைவன் ஒருபோதும் நாம் சம்பாதிக்கும் சொத்துக்களை காணி- பூமிகளைப் பார்ப்பதில்லை. உங்கள் தூய்மையான உள்ளத்தையே அவர் எதிர்பார்க்கிறார். இதனை கருத்திற்கொண்டு நாம் அனைவரும் தூய்மையான உள்ளத்துடன் தெளிவாக சிந்தித்துச் செயற்படவேண்டும். அதற்காக முன்னின்று உழைப்பது அவசியம்.

தமிழ் மொழியில் சில வார்த்தைகளைப் பேச நான் விரும்புகிறேன். நாட்டின் அரச வானொலியில் முஸ்லிம் மக்களுக்காக தினமும் ஐந்து தடவைகள் பாங் ஓசையை ஒலிபரப்ப ஆரம்பித்தது 1திஜி அரசாங்கம் தான். அதேபோன்று பலஸ்தீன மக்களுக்காக அன்று முதலில் குரல் எழுப்பியதும் நான் தான் என்பதால் நீங்கள் என்னை எப்போதும் நம்பலாம். இந்த பள்ளிவாசல் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நுவரெலியாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றைய தினம் நுவரெலியா பிரதான பெளத்த விஹாரைக்கு விஜயம் செய்து அங்குள்ள மதத் தலைவர்களின் ஆசிகளைப் பெற்றதுடன் அங்கு குழுமியிருந்த பொது மக்களோடும் கலந்துரையாடினார்.

-thinakaran

Published by

Leave a comment