புள்ளிகளால் தீர்மானிக்கப்படுவதல்ல கல்வி

ஆண்டு இறுதி பரீட்சை வந்தாலே போதும் பாடசாலை மாணவர்கள் எல்லாம் பெரிய பதற்றத்துடனே உறங்குவார்கள். கண்களில் ஒரு கிலி எப்போதுமே எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும். பெற்றோரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஏதோ ஒரு கொடிய நோய் வந்திருப்பது போல அவர்களுடைய பதட்டம் இருக்கும்.

அந்தப் பரபரப்பை அப்படியே பிள்ளைகளுடைய தலையிலும் ஏற்றி விடுவார்கள். ஒரு துரும்பைத் தூக்கி தூரமாய்ப் போடும் வேலையைக் கூட பிள்ளைகளுக்குக் கொடுக்க மாட்டார்கள். ‘படி… படி’ என்று பிள்ளைகளுடைய காதைச் சுற்றி பெற்றோரின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

வகுப்பில் நீதான் முதலாமிடம் வரணும், கணிதத்தில் நூற்றுக்கு நூறு வாங்கணும். இப்படி இந்த பரீட்சைக் காலம் முழுவதும் மாணவர்களைச் சுற்றி எப்போதும் இல்லாத அழுத்தமான சூழல் உருவாகிவிடும். பெரும்பாலும் இத்தகைய அழுத்தங்களில் விழுந்துவிடும் மாணவர்கள் தங்கள் திறமையை விடக் குறைவான புள்ளிகளையே வாங்குவார்கள் என்கிறது உளவியல்.

கல்வி ரொம்ப முக்கியமானது. ஆனால் கல்வி என்பதை புள்ளிகள் தீர்மானிப்பதில்லை. முன்பெல்லாம் மாணவர்கள் குருவைத் தேடி அலைந்தார்கள். ஒரு குருவைக் கண்டு பிடித்தால் அந்த குருவுடனே பல ஆண்டுகாலம் தங்கினார்கள். அங்கேயே அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் கல்வி கற்றார்கள். அப்போது கல்வி என்பது நல்லொழுக்கம், பணிவு எனும் இரண்டு படிகளைத் தாண்டியபிறகே கலைகள் கற்கும் நிலைக்கு வரும்.

‘ஒரு வருடம் கல்வி. அதன்பின் பரீட்சை. பரீட்சை முடிந்ததும் புத்தகங்களை கடைக்கு போட்டுவிட்டு மூளையைக் கழுவிக் காயப் போடும் இன்றைய கல்வி முறை அன்றைக்கு இல்லை. வாழ்க்கைக்குக் கல்வி எனும் அடிப்படை விடயத்தையே அன்றைய பாடம் போதித்தது.

கல்வி என்பது ஒரு மனிதனை நாகரீகமானவனாக மாற்ற வேண்டும். சமூகத்தோடு இணைந்து வாழ்வதற்குரிய நல்ல பண்புகளைப் போதிக்க வேண்டும் என்பதே சிறுவயது பாடம். அந்தக் கல்வி அவனுடைய வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதாரத்தை ஈட்டப் பயன்படுவது அடுத்த கட்டம்.

இந்த வரிசை மாறும் போதுதான் சிக்கல் உருவாகிறது. கல்வி என்பது வேலைக்கான சாவி என்று இன்றைய மாணவர்கள் நினைக்கிறார்கள். சுரண்டிப் பார்த்து இலக்கம் வந்தால் வெற்றி என கொண்டாடும் அதிஷ்டலாபச் சீட்டு போல சிலர் பார்க்கிறர்கள். அதனால்தான் மதிப்பெண் குறைந்து விட்டால் கற்ற கல்வியே பயனில்லாதது என கருதி விடுகிறார்கள்.

நீங்கள் நன்றாகப் படித்து அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. காரணம் இன்றைய சமூகம் அதை எதிர்பார்க்கிறது. ஆனால் அதையே வெற்றியின் எல்லைக்கோடாகக் கருதிவிட வேண்டாம் என்பதே சொல்ல வரும் விடயம்.

இலங்கையிலேயே முதல் மாணவனாக வரவேண்டும் எனும் ஆர்வம் ஆயிரம் பேருக்கு இருக்கலாம். ஓரிருவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறது அதற்காக மிகுதி தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரும் தோல்வியடைந்ததாக அர்த்தமில்லையே, எனவே வெற்றி என்பதை மதிப்பெண் கொண்டு அளக்காதீர்கள். உங்கள் குணாதிசயங்கள். இயல்புகள், அறிவு தன்னம்பிக்கை இவற்றைக் கொண்டு அளக்க வேண்டும்.

தன்னம்பிக்கை உள்ள இளைஞன் பாடசாலையில் தோற்றால் கூட வாழ்க்கையில் வெற்றி பெறுவான். அவன் தன்னுடைய கல்வியின் மூலமாகப் பெற்ற மூலதனம் அவனுடைய தன்னம்பிக்கை.

காகிதத்தில் எழுதி வைத்த மதிப்பெண் அல்ல. அறிவியல் மேதை ஜன்ஸ்டீனை உலகமே கொண்டாடுகிறது. காரணம் அவருடைய அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆனால் அவர் படிப்பில் சுமார்தான் தெரியுமா? ஜன்ஸ்டீனை உலகுக்கே தெரியும். அவருடைய காலத்தில் முதல் மாணவத் தலைவர் பெயர் உங்களுக்கு தெரியுமா?

தோமஸ் அல்வா எடிசனைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் ‘முட்டாள்’ என்று பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டவர். அவர் காலத்தில் படித்து முதல் மாணவனாக வந்து பதக்கம் குத்திக் கொண்டவர்களில் ஒருவர் பெயரைச் சொல்லுங்கள் பார்ப்போம்.

வாழ்க்கைதான் ஒரு மனிதனுடைய வெற்றியைத் தீர்மானிக்கிறது. வாழ்க்கையை அவன் எப்படி அணுகுகிறான் என்பதில்தான் வெற்றி தோல்வி இருக்கிறது. வாழ்க்கையில் வெற்றியடைந்தவனிடம் யாரும் போய் ‘உனக்கு பாடசாலையில் என்ன மதிப்பெண்?’ என கேட்பதில்லை.

வாழ்க்கையில் தோல்வி யடைந்தவன் ‘நான் பாடசாலையில் கோல்டு மெடலிஸ்ட்’ என்று சொல்லிக் கொள்வதிலும் பயனில்லை! போன வருடம் பதக்கம் வாங்கி யவனைக் கூட யாரும் நினைவில் வைத்திருப் பதில்லை. கல்வி நமக்கு அறிவைத் தரவேண்டும், வாழ்க்கையில் நிகழ்கின்ற சிக்கல்களைப் பக்குவத்துடன் கையாளும் மன நிலையைத் தரவேண்டும். உலகமும் அதைத் தான் எதிர் பார்க்கிறது. அதனால்தான் படித்தவன் ஒருவன் தவறு செய்யும் போது ‘படித்தவன் மாதிரியா நடந்து கொள்கிறாய்’ எனும் கோப வாக்கியங்கள் எழுகின்றன.

கல்வியில் தோற்றதற்காகவோ, மதிப்பெண் குறைந்ததற்காகவோ ஒருவன் தற்கொலை செய்து கொள்கிறான் என்று வைத்துக் கொள் ளுங்கள். அவனுடைய கல்வியால் என்ன பயன்? அவனுடைய கல்வி அவனுக்குத் தேவையான தன்னம்பிக்கையையும் மன வலிமையையும் தரவில்லை! வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனதைத் தரவில்லை. மொத்தத்தில் அவனை ஒரு கோழையாய் உருவாக்கியிருக்கிறது.

கல்வி எப்போதும் முடிவதில்லை. கடைசிப் பரீட்சையுடன் அது முடிகிறது என்று கருதுவோம்! +றிவிலிகள். கல்வி வாழ்வின் கடைசி நாள் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். வாழ்வின் ஒவ்வோர் அனுபவமும் நமக்கு ஒரு பாடத்தைச் சொல்லித் தரும். அந்த அனுபவப் பாடத்துக்கு வலிமை அதிகம்.

நீதிக் கதைகளையும் பஞ்ச தந்திரக் கதைகளையும் நமக்கு ஏன் கற்பிக்கிறார்கள்? நமது குணாதிசயம் மனித மதிப்பீடுகளின் அஸ்திவாரத்தில் கட்டி எழுப்பப்பட வேண்டும் என்பதற்காகத்தான். வாழ்வின் ஒவ்வோர் தருணத்திலும் சரியான முடிவுகளை நாம் எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். சக மனித கரிசனையில் வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.

இந்த சிந்தனைகளை மாணவர்கள் முதலில் மனதில் இருத்த வேண்டும். பெற்றோர் அதை பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆசிரியர்கள் அதை மாணவர்களிடம் கட்டியெழுப்ப வேண்டும். அப்போதுதான் கல்வி தன் முழுப் பயனை அடையும்.

வளமான தேசத்தை கல்வியறிவு பெற்ற மக்களைக் கொண்டு தான் எடை போடுவார்கள். அதிகம் கல்வியறிவு பெற்ற மக்கள் இருக்கும் தேசம் வளர்ச்சியான பாதையை நோக்கிச் செல்கிறது. கல்வியறிவில் பின்தங்கும் தேசம் தனது தோல்விகளை நோக்கிய பயணத்தையே தொடர்கிறது.

அதேபோல கல்வி என்பது வெறுமனே வாசித்து விட்டு அதைப் பிரதி எடுக்கும் வேலையைச் செய்யக்கூடாது. புரிந்து படிக்கும் நிலை உருவாக வேண்டும். கல்வி முறையின் மாற்றம் மாணவர்களை, தலைமைப் பண்புகள் குழுவாய் இணைந்து செயல்படும் தன்மை, நிர்வாகத் திறமை போன்றவற்றிலும் சிறந்தவர்களாக்க வேண்டும் என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பாடங்கள் வசீகரிக்காத போது மாணவர்கள் அதை அரவணைப்பதில்லை.

மாணவர்களுடைய விருப்பம் பெரும்பாலும் பெற்றோரால் ஏற்றுக்கொள்ளப்படுவதுமில்லை. ‘நாளைக்கு நான்கு பேர் மதிக்க வேண்டும் என்பதுதான் பெற்றோருடைய தாரக மந்திரம். அதனால் தான் குழந்தைகள் வைத்தியர், பொறியியலாளர் போன்ற துறைகளை விட்டு விட்டு வேறு துறைகளைத் தேர்ந்தெடுத்தால் பெற்றோர் கோபப்படுகிறார்கள்.

சமூகம் தன் பங்குக்கு மன அழுத்தங்களை இளைஞர்களின் மனதில் திணிக்கிறது. மாயப் பிம்பங்களையே மாணவர்கள் பெரும்பாலும் பார்க்கின்றனர். வெற்றியையும் தோல்வியையும் இயல்பாக எடுத்துக் கொள்ளும் பக்குவத்தை மாணவர்களுக்கு பெற்றோரும் சமூகமும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

சில வேளைகளில் அந்த அழுத்தம் சக மாணவர்களிடம் இருந்தும் வருவதுண்டு. அத்தகைய நண்பர்களையிட்டு விலகி இருக்க வேண்டியது அவசியம். ஆசிரியர்களும் மாணவர்களை விமர்சிக்காமல் அவர்களை ஊக்கப்படுத்தும் செயலையே முக்கியமாய்ச் செய்ய வேண்டும். மாணவர்களின் மன அழுத்தத்தை இத்தகைய செயல்பாடுகள் கழுவிக் கரைத்து விடும்.

கல்வி நமக்கு அறிவைத் தருகிறது. அத்துடன் நமக்கு நல்ல சிந்தனைகளும், உணர்வுகளும் இருக்கும்போதுதான் கற்ற கல்வி முழுமையடைகிறது. வெறுமனே அடைத்து வைக்கும் அறிவு மூளையை ஒரு வாசிகசாலை ஆக்கலாம். ஆனால் ஒரு முழுமையான மனிதனாக்க முடியாது. படித்தவர்கள் சமூக விரோதிகளாகவும், வங்கிக் கொள்ளையர்களாகவும் மக்களை ஏமாற்றும் மனிதர்களாகவும் மாறும் போது கல்வி கேலிக் கூத்தாகி விடுகிறது இல்லையா?

எனவே நல்ல குணாதிசயங்களையும், தன்னம்பிக்கையையும் முதலில் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மீது நம்பிக்கை வைத்து வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள். விமர்சனங்களை இடது கையால் ஒதுக்கி வையுங்கள். வாழ்க்கை எல்லோருக்கும் ஆனந்தமான சாலைகளை ஆயத்தம் செய்து வைத்திருக்கிறது. நம்பிக்கையுடன் பயணியுங்கள்.

-Thinakaran

Published by

Leave a comment