ஜப்பானின் புகுஷிமா அணு உலை வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு, அணு சக்திக்கு எதிராக உலகெங்கும் பரவலாக எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அணுவை நினைத்து பயப்படத் தேவையில்லை என்று விஞ்ஞானிகள் ஊக்கம் தந்தாலும், பாமர மக்களுக்கு இன்னும் கிலி குறைந்தபாடில்லை. இப்படி பாடாய்ப்படுத்தும் அணுசக்தியில் பயன்படுத்தப்படும் முக்கிய தனிமமான யுரேனியம் பற்றி தெரிந்து கொள்வோமா?
யுரேனியம் ஒரு வித்தியாசமான தனிமம். இதில் இருந்து வெளியேறும் ஒளிக்கதிர்கள் மனித குலத்துக்குப் பயனளிக்கின்றன, அச்சுறுத்தவும் செய்கின்றன. யுரேனியத்தை 1789ல் மார்ட்டின் ஹெய்ன்ரிச் க்ளாப்ரோத் என்ற ஜெர்மானியர் கண்டுபிடித்தார். திண்ம நிலையில்தான் இதைக் கண்டுபிடித்தார் அவர். அதற்கு அவர் முதலில் சூட்டிய பெயர் ‘யுரேனிட் ஓராண்டுக்குப் பிறகு ‘யுரேனஸ்’ கோளின் நினைவாக ‘யுரேனியம்’ என்று பெயர் சூட்டினார். முதல் இதில் கதிர் இயக்கத் தன்மை இருப்பதை இவர் கண்டுபிடிக்கவில்லை. ஒரு நூறாண்டு கழித்து பிரான்ஸைச் சேர்ந்த ஹென்றி பெக்யூரல் என்பவர் யுரேனியத்தில் கதிர் இயக்கத் தன்மை இருப்பதை முதன் முதலில் கண்டுபிடித்தார்.
யூரேனியம் ஒளிவீசும் வெண்மை நிறம் கொண்ட தனிமம். காற்று மண்டலத்தின் தன்மையால் கருநீலமாக மாறும் தன்மை கொண்டது. தனிமங்களிலேயே இது அதிகக் கனமானது. ஒரு கன அடி யுரேனியம் 500 கிலோ எடை இருக் கும். ஆரம்ப காலத்தில் பட்டுத் துணிகளுக்குச் சாயம் ஏற்றவும், பீங்கான் பாத்திரங்களுக்கு வண்ணம் தீட்டவுமே இது பயன்படுத்தப்பட் டது. இன்று இதன் பயனும் பயமும் அளவிட முடியாதது!
யுரேனிய அணுக் கருவிலிருந்து வெளிப்படும் கதிரியக்க ஒளிக்கதிர்கள் மனித குலத்திற்கு மிகவும் பயன் அளிக்கின்றன. விவசாயம், தொழில், உயிரியல், மருத்துவம் போன்ற துறைகளில் அதிகளவில் இக்கதிர்கள் பயன்படுத்தப்படுகின்றன. யுரேனியத்தை அழிவுக்கும் பயன்படுத்த முடியும் என்று நிரூபணமானது 1938ல் தான். அப்போது யுரேனியத்தை அக்கு வேறு ஆணிவேறாக ஆய்வு செய்த இத்தாலியின் என்ரிக்கோ ஃபர்மி தலைமையிலான குழு, அணுக் கருவை நியூந்திரனுடன் சேர்த்து வெடிக்கச் செய்தபோது அணுக்கரு பிளவைக் கண்டுபிடித்தனர்.
இப்படி நியுத்திரன் வெடிப்பதால் யுரேனியம் அணுக்கரு இரு பகுதிகளாகப் பிளந்து விடுகிறது. இந்த அணுப்பிளவு பிரமாண்டமான ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இந்த அணுப் பிளவைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட அணுகுண்டு தான் இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் ஹீரோஷிமா நகரில் வீசப்பட்டது. ஒரு நொடிப்பொழுதில் அந்நகரமே மண்ணோடு மண்ணானது. இதன் பின்புதான் யுரேனியத்தின் மதிப்பு உலக நாடுகளிடையே அதிகமாக உற்றுநோக்கப்பட்டது.
இப்போது அணுவை ஆக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தியா உட்பட பல நாடுகளும் அணு மின்சார உற்பத்திக்காக அணுக்கருப் பிளவை பயன்படுத்துகின்றன. 30 இலட்சம் பவுண்ட் நிலக்கரியை எரிப்பதால் எவ்வளவு ஆற்றல் கிடைக்குமோ, அது ஒரே ஒரு பவுண்ட் யுரேனியத் தில் இருந்து கிடைத்துவிடுகிறது. அதனால் தான் அணு உலைகளில் மின் உற்பத்திக்காக யுரேனியம் பயன்படுத்தப்படுகின்றது!
-தினகரன்
Leave a comment