நூருல் ஹுதா உமர், ஏ.பி.எம்.அஸ்ஹர்
சாய்ந்தமருது: கிராம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது 02 ஆம் பிரிவிலுள்ள கிராம சக்தி சங்க பயனாளிகள் சிலருக்கான சுய தொழில் கடன் காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக்கின் வழிகாட்டலுக்கமைய இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலக திட்டமிடல் உதவிப்பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட் பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.
இங்கு தெரிவு செய்யப்பட்ட 05 பயனாளிகளுக்கு தலா 30 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.இதன் மூலம் இவர்களது சுய தொழில் முயற்சிக்கு ஊக்கமளிப்பதே பிரதான நோக்கமாகும்.சுய தொழில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான கடன் திட்டத்தின் கீழேயே இக்காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் திட்டமிடல் பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எம்.எம்.சமீம் திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.பி.எம்.அஸ்ஹர், ஏ.ஜெமீல், எம்.ஐ.எம்.பஷீர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.இஹ்லாஸ் உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.