கொழும்பு: சீனாவே தமது உண்மை நண்பன் என்றும் இனி ஆசியாவின் எழுச்சியையும் சீனாவே வழிநடத்தும் என்பதுதான் யதார்த்தம் எனவும், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டு விழாவில் இணைய வழியாக நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு பொதுச் செயலாளரும், சீன ஜனாதிபதியுமான ஷி ஜின்பிங்கை தனது உரையில் விழித்துப் பேசிய மஹிந்த ராஜபக்ஷ, இரண்டு முகாம்களாகப் பிரித்ததன் காரணமாக சிரமங்களை எதிர்கொண்டிருந்த உலகுக்கு சீனாவே உதவியது என்றும் குறிப்பிட்டார்.
சீனா எமது வரலாற்று நட்பு நாடாகும். அந்த நீண்ட வரலாற்றில் சீனா எம்முடன் செயற்பட்டுள்ள விதத்துக்கு அமைய, சீனா எமக்குள்ள உண்மையான நண்பர் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்” எனவும் தனது உரையில் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையிலும், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால ராஜதந்திர உறவை அங்கீகரிக்கும் பொருட்டும், ஒரு நினைவு நாணயத்தை தாம் வெளியிட்டுள்ளதாகவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், “நாம் 1957ஆம் ஆண்டிலேயே சீன அரசாங்கத்துடன் ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தினோம். சீனாவை ‘சுதந்திர சீனா’வாக மாற்றிய சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் எமது நாடு ஏற்கனவே இடதுசாரி வணிக உறவுகளைப் பேணி வருகிறது” என்று தெரிவித்தார்.
“சீன கம்யூனிஸ்ட் கட்சியே தற்போது உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாகும். அந்த அரசியல் கட்சியின் வெளிநாட்டு உறவுகள் குறித்த கொள்கைக்கு அமைய, 70 ஆண்டுகளாக உலகுக்கு மிக முக்கியமான ஒரு செய்தியை அது வழங்கியுள்ளது என்பதனை நான் கூற வேண்டும்”
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெளியுறவுக் கொள்கை நிலைப்பாடுதான் சீனாவை உலக அரங்குக்கு உயர்த்தியது என்பது எனக்குத் தெரியும்” என்று தனது உரையில் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
“சீனா தனது அரசியல் கருத்துக்களை உலகின் மத்தியில் திணிக்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை. பிற நாடுகளின் விவகாரங்களை தாம் ஒழுங்குறுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்ற உணர்வை சீனா ஒருபோதும் கொண்டிருக்கவில்லை. சீனா தனது சொந்த அடிப்படையில் பிற நாடுகளுக்கு உதவியது.
ஒரு நாட்டின் சுதந்திரத்துக்கும் இறையாண்மைக்கும் இது மிகவும் முக்கியமானது. அந்த நாடுகளுக்கு தங்கள் சுதந்திரத்தை பேணி செயற்பட அனுமதித்ததனால் உலக நாடுகள் சீனாவுடன் வர்த்தகம் செய்ய தயங்கவில்லை. இலங்கையும் அதே போன்றுதான்.
அதனால்தான் உலகின் பல கதவுகள் சீனாவுக்கு திறக்கப்பட்டன. சர்வதேச அளவில் சீனாவின் முன்னேற்றத்துக்கு அந்தக் கொள்கை மிகவும் முக்கியமானதாகும்” என்றார் ராஜபக்ஷ