கொழும்பு: மாகாண சபை தேரதல், அரசியலமைப்பின் 13
ஆவது திருத்தம் உள்ளிட்ட விடயங்களில்
இந்தியா தலையிடுவது இலங்கையின்
இறையான்மையை பலவீனப்படுத்தும். புதிய
அரசியலமைப்பினை நடைமுறைப்படுத்தும்
வரை மாகாண சபை தேர்தலை தொடர்ந்து
பிற்போடுவது சாதகமாக அமையும்.

மாகாண
சபை தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது என நாட்டு
மக்கள் எவரும் போராட்டங்களை
முன்னெடுக்கவில்லை. தேர்தலுக்கு செலவிடும்
500 கோடி நிதியை பொருளாதார ரீதியில்
பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களுக்கு
பகிர்ந்தளியுங்கள் என பௌத்த மத
தலைவர்கள் ஜனாதிபதிக்கு
வலியுறுத்தியுள்ளார்கள்.
உம்மாரே கஸ்சப தேரர், அபயராம விகாரையின்
விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர்,
பெங்கமுவே ஆனந்த தேரர் ஆகிய 12 தேரர்கள்
ஒன்றினைந்து மாகாண சபை தேர்தல்
தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி
வைத்துள்ளார்கள்.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்தும்
நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு
ஜனாதிபதி வழங்கிய ஆலோசனையினை
அறிந்து ஆச்சரியமடைந்தோம். ஜெனிவா
கூட்டத்தொடர் இடம் பெறும் வேளை
இவ்வாறான கருத்துக்கள் குறிப்பிடுவது
அரசியல் இராஜதந்திரம் என உணர்ந்தோம்.
இலங்கை தொடர்பிலான 46.1 பிரேரணை
மீதான விவாதத்தில் இந்தியா இலங்கைக்கு
ஆதரவாக வாக்களிக்கவில்லை.
வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளவில்லை.
இந்தியாவின் இச்செயற்பாடு இலங்கை
தொடர்பில் கொண்டுள்ள நிலைப்பாட்டை
நன்கு வெளிப்படுத்தியுள்ளது. அயல்நாடு
என்ற ரீதியில் எதிர்பார்க்கப்பட்ட ஒத்துழைப்பு
கிடைக்கப் பெற்றதா என்ற சந்தேகம் தோற்றம்
பெற்றுள்ளது.
மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்தி
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை
முழுமையாக செயற்படுத்துமாறு இந்திய
வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை
அவதானத்துக்குரியது. இலங்கையின் உள்ளக
விவகாரங்களில் தலையிடும் உரிமை
இந்தியாவிற்கு கிடையாது. ஆகவே இவ்விடயம்
குறித்து அரசாங்கம் இந்தியாவிற்கு
உறுதியான தீர்மானத்தை அறிவிக்க
வேண்டும்.
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு நாட்டு
மக்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை
ஏற்படுத்தவில்லை. நாட்டுக்கு பொருந்தும்
வகையில் அரசியலமைப்பினை உருவாக்க
வேண்டும் என்பது பெரும்பான்மை மக்களின்
பிரதான எதிர்பார்ப்பாக காணப்பட்டது. புதிய
அரசியலமைப்பு குறித்து ஜனாதிபதி அதிக
அவதானம் செலுத்த வேண்டும்.
மாகாண சபை தேர்தலை நடத்த குறைந்தபட்சம்
500 கோடி நிதியாவது
தேவைப்படும். எத்தரப்பினருக்கும்
பயனளிக்காத மாகாண சபை தேர்தலுக்காக
பெருந்தொகையான பணத்தை செலவிடுவது
பயனற்றது. மாகாண சபை தேர்தலை
நடத்துமாறு நாட்டு மக்கள் எவரும்
போராட்டங்களில் ஈடுப்படவில்லை. மாகாண
சபை தேர்தலுக்கு செலவிடும் பணத்தை
பொருளதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள
மக்களுக்கு நிவாரண அடிப்படையிலாவது
பகிர்ந்தளியுங்கள் . அப்போதாவது மக்கள்
பயன் பெறுவார்கள்.
புதிய அரசியலமைப்பை உருவாக்கி அது
நடைமுறைப்படுத்தும் வரை மாகாண வசபை
தேர்தலை அரசாங்கம் நடத்த கூடாது. வீண்
செலவுகளை குறைப்பதாக அரசாங்கம்
குறிப்பிடுகிறது . அவ்வாறாயின் இலங்கை
போன்ற சிறிய நாட்டுக்கு மாகாண சபை
தேர்தல் அவசியமற்றது. அதற்கு செலவிடும்
நிதியும் பயனற்றது. ஆகவே ஜனாதிபதி நாட்டு
மக்களுக்கு பயன்பெறும் விடயங்கள் மாத்திரம்
கவனம் செலுத்த வேண்டும்.