நிந்தவூர்: நிந்தவூர் பிரதேசத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவரின் சகோதரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றியிருந்தது பற்றிய செய்தியின் உண்மை நிலவரம் குறித்து நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி தஸ்லிமா பஷீரிடம் வினவியபோது.

அவர் குறிப்பிடுகையில்,
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்ற பெண்மணியின் சகோதரரான 20 வயது மதிக்கத்தக்க ஒருவர் கடந்த நான்கு வாரங்களுக்கு முன்பு மாலைதீவிலிருந்து வருகை தந்ததுடன், அவரை 2 வாரங்கள் வெலிகந்த வைத்தியசாலயில் தனிமைப்படுத்தி, அதன்பிறகு பின்னர் மீண்டும் இரண்டு வாரங்கள் தன்னுடைய வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி இருந்தார்.
இவர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்ற நேரத்தில் இவருக்கும், இவரது இரண்டு சகோதரிகளுக்கும் எம்மால் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதில் இவருடைய சகோதரி ஒருவருக்கு PCR பரிசோதனையின் போது கொரோனாவிற்கான அறிகுறிகள் காணப்பட்டுள்ளதாகவும் மற்றொரு சகோதரியின் PCR பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் மலேசியாவில் இருந்து வருகை தந்தவர் ஏற்கனவே தனிமைப்படுத்தல் இருந்து நோய் தொற்றுக்கான எந்த அறிகுறிகளும் இல்லாத நிலையிலேயே, இவருடைய சகோதரிக்கு PCR பரிசோதனையில் நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி தெரிவித்ததுடன், இது சில வேளைகளில் Post Positive ஆக இருக்கலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி அழகையா லதாகரன் தெரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.