புத்தளம்: புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி
வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை
காலை (24) பீ.சி.ஆர் பரிசோதனைக்கு
உட்படுத்தப்பட்ட மீன் விற்பனையாளர்கள்
மற்றும் வாகன சாரதிகள் 40 பேரில் ஒருவர்
திடீரென உயிரிழந்துள்ளார்.

கற்பிட்டி கண்டல்குழி பகுதியைச் சேர்ந்த 32
வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு
உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு பேலியகொட மீன் சந்தைக்கு
அன்றாடம் மீன் விற்பனைக்காக சென்றுவரும்
மீனவர்கள் மற்றும் லொறி சாரதிகள் 40
பேருக்கு இன்று சனிக்கிழமை காலை பீ.சி.ஆர்
பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போதே குறித்த நபர் திடீரென
உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலைத்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த நபரின் சடலம் கற்பிட்டி
வைத்தியசாலையிலிருந்து பூரண
பாதுகாப்புடன் புத்தளம் தள
வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் இரத்த மாதிரிகள் தற்போது
பீ.சி.ஆர். பரிசோதனைக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளதுடன், பரிசோதனை
முடிவுகள் கிடைத்தவுடன் மேலதிக
நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கற்பிட்டி
மற்றும் புத்தளம் பகுதிகளுக்குப் பொறுப்பான
திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன்
முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார்.