கொழும்பு: 20ஆவது திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக ஜக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் உட்பட 8 பேர் ஆதரவாக வாக்களித்துள்ளார்கள். ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி எம்.பிகளும் தேசிய முஸ்லிம் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களும் இவ்வாறு ஆதரவாக வாக்களித்தார்கள்.

2ஆம் மற்றும் 3ஆம் வாசிப்புகளின்போது, ஐக்கிய மக்கள் சக்தி தேசியப் பட்டியல் உறுப்பினர் டயனா கமகே, ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிகளான முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஹாபிஸ் நஸிர் அஹமட், எச்.எம்.எம். ஹரீஸ், எம்.எஸ். தௌபீக், பைசல் காசிம், தமிழ் முற்போக்கு முன்னணி உறுப்பினர் அரவிந்த் குமார், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் இஷாக் ரஹ்மான், தேசிய முஸ்லிம் கூட்டமைப்பு எம்.பி. அலி சப்ரி ரஹீம் ஆகிய 8 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.
இதேவேளை 20ஆவது திருத்தத்தின் 17ஆவது சரத்தான இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான திருத்தத்தின் மீதான வாக்கெடுப்பில் குறித்த 8 பேருடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம்.பி. எஸ்.எம்.எம். முஷாரபும் வாக்களித்திருந்தார்.
வாக்கெடுப்பிற்கு முன்னதாக எதிரணியில் உள்ள சில மு.கா எம்.பிகளை சுற்றி ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிகள் காவல் இருந்ததோடு இதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.ஹாபிஸ் நஸீர் அஹமட்,அரவிந்த குமார் ஆகியோரை சுற்றியே எதிரணி எம்.பிகள் இருந்ததோடு வாக்கெடுப்பு முடிந்த நிலையில் சில ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிகள் ,ஆதரித்த மு.கா எம்.பிகளை விமர்சித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.