கோலாலம்பூர்: கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து இந்தியா, இந்தோனீசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே விசா பெற்றிருப்பவர்களுக்கும் இந்த தடை பொருந்தும்.
இம்மூன்று நாடுகளிலும் அண்மைக் காலத்தில் ‘கோவிட்-19’ நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை மலேசிய அரசு சுட்டிக் காட்டியுள்ளது.
செப்டம்பர் 7ஆம் தேதி முதல் இந்த தடை அறிவிப்பு அமலுக்கு வருவதாக மலேசிய மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்தார்.
இதையடுத்து மலேசியாவில் நீண்ட காலம் தங்கியிருப்பதற்கான விசா வைத்துள்ள இந்தியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தாருக்கும் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களுக்கும் சிக்கல் எழுந்துள்ளது. பல்வேறு காரணங்களுக்காக மலேசியாவில் இருந்து இந்தியாவுக்குச் சென்றவர்கள், எதிர்வரும் 7ஆம் தேதிக்குள் மீண்டும் மலேசியா திரும்பவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட மேற்குறிப்பிட்ட மூன்று நாடுகளிலும் வைரஸ் தொற்று அதிகரித்ததால் மலேசிய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
இதேபோல் ஏனைய பிற நாடுகளின் வைரஸ் தொற்று நிலவரத்தையும் மலேசிய அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை மற்ற நாடுகளின் மீதும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றார்.
“வேறு எந்தெந்த நாடுகளில் வைரஸ் தொற்று அதிகரிக்கிறது என்பதைக் கவனித்த பிறகு இதேபோன்ற கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும். எனினும் தற்போது இந்தியா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு மட்டுமே இந்தக் கட்டுபாடு பொருந்தும்.
“வெளிநாடுகளில் இருந்து மலேசியாவுக்கு வருபவர்களால் வைரஸ் தொற்று இறக்குமதியாகிவிடக் கூடாது என்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம். வேறெந்த வகையில் வைரஸ் தொற்று இறக்குமதியாவதை தடுக்க முடியும் என்பது தொடர்பில் மலேசிய சுகாதார அமைச்சின் ஆலோசனை அறிக்கையைக் கேட்டிருக்கிறோம்,” என்றார் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி.
எனினும் இந்தியா உள்ளிட்ட மூன்று நாடுகளிலிருந்தும் மலேசியா திரும்பும் மலேசியர்களுக்குக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்திய அவர், சொந்த குடிமக்களை நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்தால் அது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகிவிடும் என்று சுட்டிக் காட்டினார்.