கொழும்பு: எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தமது பிரச்சார நடவடிக்கைகளுக்காக தனது புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். அதுபோன்று பாதுகாப்பு சேவைகள், அரச சேவைகள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் எவரும் அரசியல் பணிகளில் ஈடுபடக் கூடாதென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்கள் தமது பிரச்சார நடவடிக்கைகளில் ஜனாதிபதியின் புகைப்படங்களை பயன்படுத்துவதாகவும் இராணுவம் மற்றும் அரச அதிகாரிகளை சம்பந்தப்படுத்திக் கொள்வதாகவும் பல்வேறு நியமனங்களை பெற்றுத் தருவதாக குறிப்பிடுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர அனைத்து ஆளுநர்கள், அமைச்சின் செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள், நியதிச்சட்ட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய துறைத் தலைவர்களுக்கு நேற்று (02) அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.