கொழும்பு: இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் முதன் முறையாக, புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வீடியோ மூலமாக வழக்கு நடவடிக்கைகள்( 20) ஆரம்பிக்கப்பட்டன. புதுக்கடை நீதவான் நீதிமன்றம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை ஆகியவற்றை நேரடியாக வீடியோ தொழில்நுட்பம் மூலம் இணைத்து மேற்கொள்ளப்பட்ட முதலாவது சோதனை திட்டம் இதுவாகும் என, நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

நீதியமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் ஆலோசனைக்கு அமைய ஶ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்துடன் இணைந்து இம்முயற்சி ஆரம்பமானது.
சிறைக் கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதற்கு பதிலாக, அவர்கள் வெலிக்கடை சிறைச்சாலையில் நிறுவப்பட்ட தொழில்நுட்ப வளாகத்திலிருந்து, விசேட மென்பொருளின் மூலம் நேரடியாக வீடியோ மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள்.
இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான அடுத்த கட்டமாக, முழு நாட்டையும் உள்ளடக்கி, இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி நிறுவுவதற்கான பணிகள் ஏற்கனவே இடம்பெற்று வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.