கல்முனை: கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் நேற்றிரவு (13.05.2020) அத்துமீறி வீட்டுக்குள் புகுந்த சில நபர்கள் அங்கிருந்த கைத்தறி நெசவு உற்பத்திப் பொருட்களை வெட்டி சேதப்படுத்திவிட்டு நெசவு உற்பத்திக்காக பொருத்தப்பட்டிருந்த 4 இலட்சம் ரூபா பெறுமதியான பாக்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வீட்டு உiரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கும் போது,
கைகளில் கத்தியோடு வீட்டுக்குள் புகுந்த சந்தேக நபர்கள் வீட்டு முற்றத்தில் நெசவு உற்பத்திக்காக போடப்பட்டிருந்த கைத்தறி உபகரணங்களை தாறுமாறாக வெட்டி சேதப்படுத்தி விட்டு நெசவு உற்பத்திக்காக பொருத்தப்பட்டிருந்த உபகரணங்களையும் எடுத்துச் சென்றனர். இந்த நாசகாரச் செயலை ஏன் செய்கின்றீர்கள் என்று சிலர் கூக்குரல் இட்டபோது கத்தியை காட்டி அச்சுறுத்தியது மட்டுமல்லாமல் சிலரை தாக்கினார்கள்

இந்த கைத்தறி நெசவு உற்பத்தி இயந்திரங்கள் அயல் கிராமமான மருதமுனை அல் – மினன் வீதியில் வசித்து வருகின்ற எச்.எம்.முஸ்தபா என்பவருக்கு சொந்தமானதாகும் என வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
தமிழ் – முஸ்லிம் மக்கள் சகோதரத்துவத்தோடு வாழ்ந்து வருகின்ற பாண்டிருப்பு-மருதமுனை எல்லைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவமானது ஒரு இனமோதலை தோற்றுவிப்பதற்கான உந்துசக்தியாக இருக்கலாம் எனவும் பொதுமக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.