கொழும்பு: இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று (28) பிற்பகல் 7.30 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 3 பேர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றியவர்வர்களின் எண்ணிக்கை 596 இலிருந்து 599 ஆக அதிகரித்த நிலையில், இரவு 8.05 மணியளவில் மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து அவ்வெண்ணிக்கை 599 இலிருந்து 611 ஆக அதிகரித்துள்ளது.

அதற்கமைய, இன்றையதினம் (28) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 23 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 08 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 611 பேரில் தற்போது 470 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 134 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 07 பேர் மரணமடைந்துள்ளனர்.