கொழும்பு: இலங்கையில் வயது குறைந்த கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்ட 4 மாத குழந்தை முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளது. கடந்த மார்ச் 29 ஆம் திகதி, நாத்தாண்டியா பகுதியில் 4 மாத குழந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அதற்கமைய, இலங்கையில் முதன் முதலாக வயது குறைந்த கொவிட்-19 தொற்றுக்குள்ளானவராக அக்குழந்தை அடையாளம் காணப்பட்டது.
இக்குழந்தைக்கு, இந்தியாவிற்கு சென்று திரும்பியிருந்த அவரது பாட்டன் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை தெரிய வந்திருந்தது.
குறித்த குடும்பத்தின் 6 பேர் IDH வைத்தியசாலையில் மருத்துவ கண்காணிப்பில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, இவர்களுடன் நேரடி தொடர்பு கொண்டிருந்த 20 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இக்குழந்தை அங்கொடையில் உள்ள IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளது.
அதற்கமைய நாத்தாண்டியா பகுதியில் அடையாளம் காணப்பட்ட 3 பேர் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக நாத்தாண்டியா பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.