கொழும்பு: உயிர்த்த ஞாயிறு தினமான, கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி, மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைதாரிக்கு உதவியதாக தெரிவிக்கப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (29) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இதனைத் தெரிவித்தார்.

குறித்த தாக்குதலை மேற்கொண்ட தாக்குதல்தாரிக்கு, போக்குவரத்து வசதியை வழங்கி, அவரை வழிநடத்தி இயக்கிய முக்கிய சந்தேகநபர் இவர் எனவும், அவர் இன்றையதினம் (29) குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் (சிஐடி) கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்கள், தாக்குதல்தாரிகள் உள்ளிட்ட விசாரணைகளில் கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பு விபரங்கள், அவர்கள் சென்று வந்த இடங்கள், ஆகியவற்றின் மூலம் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து இன்றைய தினம் (29) குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் கொழும்பு, கல்கிஸ்ஸை, காலி வீதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து,, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளை, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் 31 சந்தேகநபர்களும் தீவிரவாத தடுப்பு பிரிவில் சுமார் 60 பேரும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறித்த நபரை கைது செய்ய அதிக காலம் சென்றமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜாலிய சேனாரத்ன, ஏற்கனவே இடம்பெற்ற விசாரணைகளில் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறுவதாக அவர் தெரிவித்தார்.