கொழும்பு: ஊரடங்கு அமுலில் இருக்கின்ற வேளையில் அதனை மீறும் வகையில் நடந்து கொண்ட 1,754 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை 6.00 மணிக்கு பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தியது முதல், இன்று (23) காலை 6.00 மணி வரை, குறித்த 1,754 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அந்தந்த பொலிஸ் நிலையங்களால் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையின் போது, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் பெரும்பாலானோர் வீதிகளில் நடமாடியவர்கள் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி உள்ளிட்ட 447 வாகனங்களை பொலிஸார் இதன்போது கைப்பற்றியுள்ளனர்.
இதில், மைதானத்தில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்தோர், ஊரடங்கின்போது உணவகம் திறந்திருந்தவர், வீதிகளில் வாகனங்களில் பயணித்தோர், மது அருந்தி முறையற்ற வகையில் வீதியில் நடமாடியோர், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டவர்களும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் அந்தந்த பொலிஸ் நிலையங்கள் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.