மக்கள்மைய பொருளாதாரத்தினை கட்டியெழுப்பி வறுமையை ஒழிப்பது தனது நோக்கமாகுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று (20) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற அகில இலங்கை சமூர்த்தி அபிவிருத்தி, விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவி அலுவலர்கள் சங்கத்தின் 22வது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். “சமூர்த்தி விவசாய உரிமைகளை உறுதிப்படுத்தும் பொதுஜன யுகம்” என்ற கருப்பொருளின் கீழ் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சமூர்த்தி மற்றும் விவசாய அலுவலர்கள் 176 பேருக்கு இதன்போது நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. கடந்த ஐந்து வருடக் காலப்பகுதியில் நிரந்தர நியமனம் கிடைக்காத சமூர்த்தி புதிய நியமனங்களை பெற்றுக்கொண்டவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டன.
சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த மக்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்திற்கான வருமானத்தை அதிகரிப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும். அதன் ஒரு கட்டமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சம் பேருக்கு அரசாங்க தொழில்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவர்களை தெரிவு செய்யும்போது சமூர்த்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி அலுவலர்களின் உதவி அவசியமாகுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எமது அரச ஊழியர்களின் எண்ணிக்கை 15 இலட்சமாகும். அவர்களது உரிமைகள் மற்றும் சலுகைகளுக்காக மக்களின் பணத்திலிருந்தே செலவிடப்படுகின்றது. அரச வருமானம் முறையாக திறைசேரிக்கு கிடைக்குமானால் அனைத்து துறைக்குமான உரிமைகள் சலுகைகளை உறுதிப்படுத்த முடியும். அரசாங்கம் என்ற வகையில் அனைத்து அரச ஊழியர்களினதும் உரிமைகளை பெற்றுக்கொடுக்க தயாராகவுள்ளது. அரச ஊழியர்கள் அவர்களது பொறுப்புக்களை நாட்டுக்காக நிறைவேற்ற வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.