ஜப்பானின் யுகோஹாமா துறைமுகத்துக்கு வந்த சொகுசு கப்பலில் இருந்தவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், கிட்டத்தட்ட பத்து பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டயமண்ட் பிரின்சஸ் என்ற பெயருடைய இந்தக் கப்பலில் உள்ள 3700 பேரில் 300 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.

சீனாவின் கிழக்குப் பகுதியில் கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக சுமார் 1.8 கோடி மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வைரசின் பரவலைக் கட்டுப்படுத்த சீன அதிகாரிகள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலின் மையப் புள்ளியாக உள்ள வுஹான் நகரில், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட 11 பொது இடங்கள் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலாக 10 ஆயிரம் படுக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது ஜப்பான் கடலில் நிற்கும் டயமண்ட் பிரின்சஸ் கப்பலின் ஊழியர்களும், நோய் பாதித்த பயணிகளும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டிருப்பார்கள். ஏனெனில் இந்த வைரஸின் சினைக் காலம் இரண்டு வாரம் என்று நம்பப்படுகிறது.
நோய் தொற்றியுள்ள 10 பேரும் 50க்கும் மேற்பட்ட வயதினர், அவர்களில் ஒருவர் 80 வயதுக்காரர் என்கிறது ஜப்பானிய ஒளிபரப்பு நிறுவனம் என்.எச்.கே. அவர்களில் இருவர் ஜப்பானியர்கள். இவர்களில் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை.