ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் எந்தவிதமான முன் நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. “ஈரான் ராணுவத் தளபதி காசெம் சுலேமானீயை தற்காப்புக்காகவே கொலை செய்தோம்” என்று ஐக்கிய நாடுகள் அவைக்கு எழுதிய கடிதம் ஒன்றில் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில், இரானின் மிக சக்திவாய்ந்த ராணுவத் தளபதி ஜெனரல் காசெம் சுலேமானீ, வெள்ளிக்கிழமையன்று இறந்தார்.
மத்திய கிழக்கு பகுதியில் உள்ள தங்கள் நாட்டு ஊழியர்கள் மற்றும் நலன்களை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்கும் என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரான் மீதான பொருளாதார தடைகள் நீடிக்கும் சூழலில், பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா முன்வந்துள்ளது என்று ஐநாவுக்கான இரான் தூதர் மஜித் தக்த் ராவன்சி கூறியுள்ளார்.
இராக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் மீது இரான் நடத்திய தாக்குதலும் ஐநா சாசனத்தின் பிரிவு 51இன் கீழ் நியாயப்படுத்தக்கூடியதே என்று அவர் கூறியுள்ளார்.
ஐநா பாதுகாப்பு சபைக்கு இரான் எழுதியுள்ள கடிதத்தில் தங்கள் தரப்பு போரையோ நிலைமை மோசமாவதையோ விரும்பவில்லை என்றும், உரிய அளவிலான பதில் ராணுவ நடவடிக்கையை தாங்கள் எடுத்ததாக கூறப்பட்டுள்ளது.
தாங்கள் நடத்திய தாக்குதலில் அப்பகுதியில் இருந்த பொதுமக்களுக்கோ அவர்களின் சொத்துகளுக்கோ சேதம் ஏற்படவில்லை. ராணுவ நிலைகள் மீது மட்டுமே இலக்கு வைத்து தாக்கப்பட்டது என்றும் இரானின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.